காவிரி விவகாரத்தில் தமிழகம் நெருக்கடி.. கர்நாடகாவில் நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம்
பெங்களூர்: ஆகஸ்ட் மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா வழங்காமல் இழுத்தடித்து வருவதாக தமிழகம் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இதுகுறித்து ஆலோசிக்க கர்நாடக அனைத்து கட்சி கூட்டம் நாளை மறுநாள் பெங்களூரில் கூடுகிறது.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடகா, தமிழகத்திற்கு 50 டிஎம்சி தண்ணீர் விட வேண்டும். ஆனால், கர்நாடகாவோ தங்கள் மாநிலத்தில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் திறக்க முடியாது என அடம் பிடிக்கிறது.
கர்நாடகாவை தண்ணீர் திறக்க உத்தரவிடும்படி, தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரதமருக்கும், இதுகுறித்து ஜெயலலிதா கோரிக்கைவிடுத்துள்ளார்.
தமிழக விவசாயிகள் குழு ஒன்று இன்று, கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பெங்களூரில் சந்தித்து, காவிரியில் நீர் திறக்க கேட்டுக்கொண்டது. அவர்களிடம், தண்ணீர் திறக்க முடியாது என்று சித்தராமையா கூறிவிட்டார்.
தமிழக தரப்பில் இருந்து நெருக்கடிகள் அதிகரிப்பதால், இதை எப்படி சமாளிப்பது, உச்சநீதிமன்றத்தில் எப்படி பதில் அளிப்பது என்பது குறித்து ஆலோசிக்க, நாளை மறுநாள், காலையில், பெங்களூரில் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் சித்தராமையா கூட்டியுள்ளார்.
கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பாட்டில் இன்று இதை தெரிவித்தார். சட்டசபை, சட்ட மேலவையின் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அதிகாரிகளும், சட்ட வல்லுநர் குழுவும் இதில் பங்கேற்கிறார்கள்.