அனுமதி இல்லாத பள்ளிகளை மூட கர்நாடக அரசு உத்தரவு – 1 லட்சம் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறி!
பெங்களூரு: கர்நாடகாவில் அனுமதிபெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வரும் பள்ளிகளை மூட வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் அப்பள்ளிகளில் படிக்கும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அனுமதி பெறாமல் இயங்கி வந்த பள்ளி ஒன்றில் அக்டோபர் மாதம் 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அப்பள்ளியை மூடவும், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றவும் கர்நாடக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் சர்வதேச பள்ளி ஒன்றில் மற்றொரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விசாரணையில், அப்பள்ளி கடந்த ஓராண்டாக அனுமதி பெறாமல் இயங்கி வந்தது அம்பலமாகி உள்ளது.
பள்ளிகளில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்ததை அடுத்து, அனுமதி பெறாமல் இயங்கும் பள்ளிகளை கண்டறிந்து அப்பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதனால் அனுமதி பெறாத பள்ளிகளை கண்டறியும் நடவடிக்கையில் கர்நாடக கல்வித்துறை இறங்கி உள்ளது.
அரசு அளித்துள்ள பட்டியலில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் சிலவும் இடம்பெற்றுள்ளன. இதனால் அரசின் இந்த நடவடிக்கை கல்வி துறையையும், கல்வி திட்டத்தையும் கடுமையாக பாதிக்கும் என பள்ளிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications