காவிரி: 23ம் தேதி கர்நாடகத்தில் சிறப்பு சட்டசபை கூட்டம்.. அதிரடி முடிவுகளுக்கு வாய்ப்பு!
பெங்களூர்: காவிரி பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக வரும் சனிக்கிழமை ஒருநாள் சிறப்பு சட்டசபை கூட்டத்தை கர்நாடக அரசு கூட்டியுள்ளது. புதன்கிழமை, இன்று முதல்வர் சித்தராமையா தலைமையில், நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டது.
காவிரியிலிருந்து வரும் 27ம் தேதிவரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை இன்னும் 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்து இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவையை கூட்டினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. மதியம் வரை அமைச்சரவை கூட்டம் நீடித்தது.
இன்று மாலை 6 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தையும் சித்தாரமையா கூட்டியுள்ளார். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளது.
இக்கட்டுக்கு திட்டம்
இதுகுறித்து கர்நாடக அரசு வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, அரசியல் சாசன இக்கட்டை ஏற்படுத்தும் வகையில் கர்நாடக அரசின் நடவடிக்கைகள் அமையப்போவதாக காதை கடித்தனர். அது என்ன இக்கட்டு என்கிறீர்களா.. மேலும் பாருங்கள்.
சட்டசபையில் தீர்மானம்
உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கூடாது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிலேயே கர்நாடகாவுக்கு ஒப்புதல் இல்லாத நிலையில், அதை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகா ஒருபோதும் ஏற்காது.. என சட்டசபையை கூட்டி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்ற சித்தராமையா அரசு திட்டமிட்டுள்ளதாம்.
அரசியல் சாசன சிக்கல்
சட்டசபையை கூட்டி இதுபோன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற அனைத்துக்கட்சிகளையும் ஒப்புக்கொள்ள வைக்கவே இன்று அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு சட்டசபை கூட்டத்தை கூட்டி, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால் அதில் அரசியல் சாசன சிக்கல் எழும்.
சட்டசபை அதிகாரம்
ஜனநாயகத்தில், சட்டசபைக்கு நீதிமன்றத்திற்கு ஈடான அதிகாரம் உள்ளது. சில நேரங்களில் நீதிமன்றங்களைவிடவும் சட்டசபைக்கு அதிகாரம் உள்ளது என்ற வாதங்கள் வந்ததையும் நாம் பார்த்துள்ளோம். தமிழக சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன், தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக அறிவித்ததும் தமிழர்கள் அறிந்ததே.
மத்திய அரசுக்கு வலை
எனவே கர்நாடக சட்டசபை இப்படி ஒரு தீர்மானத்தை ஏக மனதாக நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து, மத்திய அரசை சிக்கலில் மாட்டிவிட, அதாவது பந்தை பாஜக கோர்ட்டுக்கள் தட்டிவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவின் கோரிக்கைகளை மோடி காதில் போட்டுக்கொள்ளவில்லை, சித்தராமையாவை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்பது போன்ற கோபத்தை இப்படி தீர்த்துக்கொள்ள கர்நாடக அமைச்சரவை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரத்தை விட மாட்டார்
"சித்தராமையா பெரும்பாலும் அதிகாரத்தை துறக்கும் முடிவுக்கு செல்லமாட்டார். முதல்வர் பதவிக்காக அவர் தவம் இருந்தவர். எனவே, பந்தை பாஜக கோர்ட்டுக்கள் தட்டிவிடவே பார்ப்பார்" என்கிறார் சித்தராமையாவை வெகுகாலமாக அருகில் இருந்து கவனித்துக்கொண்டுவரும் ஒரு மூத்த பத்திரிகையாளர். ம.ஜ.த தலைவர் குமாரசாமியும் இதே தொனியில் பேசுகிறார்.
ஆட்சி கலையாதுங்க
குமாரசாமி கூறுகையில், உத்தரபிரதேசம், பஞ்சாப் தேர்தல்கள் அடுத்தடுத்துவர உள்ள நிலையில், கர்நாடகாவில் ஆட்சியை இழக்க காங்கிரஸ் விரும்பாது. தேர்தல் செலவுகளுக்கு கர்நாடகாவில் இருந்துதான், கப்பம் பெறப்படும் என்பதால் ஆட்சியை துறக்கும் முடிவுக்கு, சோனியா காந்தி ஒப்புதல் கொடுக்க மாட்டார். வேண்டுமென்றால் பாருங்களேன்.. எனக்கு நன்கு தெரியும் என்கிறார்.
சிறப்பு சட்டசபை கூட்டம்
இதனிடையே, சிறப்பு சட்டசபை கூட்டத்தை வரும் 23ம் தேதி சனிக்கிழமை கூட்ட இன்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தில், காவிரி பிரச்சினை குறித்து அனைத்து கட்சிகளின் கருத்தையும் கேட்டு அரசு இறுதி முடிவை அறிவிக்கும். அநேகமாக மேற்கூறியவாரே முடிவுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படும். சட்டசபை கூட்டம் நடைபெறும்வரை தமிழகத்திற்கு செல்லும் தண்ணீரை நிறுத்தவும் கர்நாடகா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.