சொத்து மதிப்பீட்டில் பிழை- ஜெ.வுக்கு தண்டனை தந்த தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்: கர்நாடகா வாதம்
டெல்லி: ஜெயலலிதாவின் சொத்துகளை கர்நாடகா உயர்நீதிமன்றம் மதிப்பீடு செய்ததில் வெளிப்படையாகவே பிழைகள் இருக்கின்றன; இந்த வழக்கை மேம்போக்காகத்தான் கர்நாடகா உயர்நீதிமன்றம் விசாரித்தது; ஆகையால் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை கொடுத்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் தவே வாதிட்டார்.
1991-96ஆம் ஆண்டு முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ55 கோடி சொத்து குவித்தார் என்பது வழக்கு. 18 ஆண்டுகாலம் நடைபெற்ற இவ்வழக்கில் பெங்களூர் தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இம்மனுவை விசாரித்த தனி நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார். அப்போதே நீதிபதி குமாரசாமி, சொத்து மதிப்புகளை தவறாக மதிப்பிட்டிருப்பதாக கூறப்பட்டது.
ஜெ. விடுதலைக்கு எதிராக அப்பீல்
இந்நிலையில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையையும் இழுத்தடிக்க ஜெயலலிதா தரப்பு முயற்சித்தது. ஆனால் உச்சநீதிமன்றமோ ஜெயலலிதா தரப்பு கோரிய கால அவகாசத்தை அளிக்க மறுத்து இறுதி வாதத்தை கர்நாடகா அரசு தொடங்க அனுமதித்தது.
தவே இறுதி வாதம்
ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே இன்று தமது இறுதிவாதத்தை தொடங்கினார். அப்போது அவர்முன்வைத்த வாதம்:
ரூ55 கோடி சொத்து குவிப்பு
1996-ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலகியபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ55 கோடி சொத்து குவித்திருந்தார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவித்தனர். இவர்கள் 4 பேரும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி சொத்து குவித்தனர்.
சொத்து விவரத்தை தெரிவிக்காதது ஏன்?
ஜெயலலிதா ஒரு அரசு ஊழியர் என்ற முறையில் தமது சொத்து விவரங்களை அரசுக்கு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர் தெரிவிக்கவில்லை. இத்தகைய அம்சங்கள் எதனையுமே கர்நாடகா உயர்நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை.
மேம்போக்காக விசாரித்த ஹைகோர்ட்
தமக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் மிக மிக மேம்பாக்காகவே விசாரித்தது. ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை கொடுத்த விசாரணை நீதிமன்றத்தின் முடிவுகள் எதனையுமே கர்நாடகா உயர்நீதிமன்றம் கண்டுகொள்ளவே இல்லை.
சதிச் செயல் ஆதாரங்கள்
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் சதிச்செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருந்தும் கர்நாடகா உயர்நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை கர்நாடகா உயர்நீதிமன்றம் மதிப்பீடு செய்ததில் அப்பட்டமான, வெளிப்படையாகவே பிழைகள் இருக்கின்றன. இந்த அம்சங்களால்தான் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு முன்வைத்த மிக முக்கியமான ஆட்சேபனைகளை கர்நாடகா உயர்நீதிமன்றம் ஒதுக்கி தள்ளிவிட்டது. அதேபோல் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கவும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வாய்மொழியாகவே வாதத்தை முன்வைக்குமாறு உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
தண்டனை தீர்ப்பை உறுதி செய்யவேண்டும்
ஜெயலலிதா உட்பட 4 பேரும் சேர்ந்து கூட்டாக சதிச் செயலில் ஈடுபட்டனர் என்பதை மிகத் தெளிவாக விசாரணை நீதிமன்றம் நிரூபித்திருக்கிறது. ஆனால் இதை கர்நாடகா உயர்நீதிமன்றம் மிக எளிதாக தள்ளுபடி செய்திருக்கிறது.
ஆகையால் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார்.