ரெண்டு பேரு செய்ததெல்லாம் கூட்டு பலாத்காரம் கிடையாதுங்க... கர்நாடக உள்துறை அமைச்சர் சர்ச்சை பேட்டி
பெங்களூர்: இரண்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது கூட்டு பாலியல் பலாத்காரம் கிடையாது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவர் அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். தேசிய பெண்கள் ஆணைய தலைவர் லலிதா குமாரமங்கலமும், ஜார்ஜ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் கால்சென்டர் ஊழியராக வேலை பார்க்கும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் கடந்த சனிக்கிழமை இரவு ஓடும் வேனில் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை மடிவாளா போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ் பேசுகையில், "இரண்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது கூட்டு பாலியல் பலாத்காரம் கிடையாது. கூட்டு பாலியல் பலாத்காரம் என்பது நான்கு முதல் ஐந்து பேர் ஈடுபடுவது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்" என்றார்.
அமைச்சரின் இப்பேச்சுக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக லலிதா குமாரமங்கலம் கூறுகையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை ஆண்கள் புரிந்துக் கொள்ளவில்லை என்பதற்கு கர்நாடக அமைச்சர் பேச்சு மற்றொரு உதாரணம்.
பொது வாழ்க்கையில் உள்ள தலைவர்கள் குறிப்பாக அரசியல் கட்சியில் உள்ளவர்கள் பேசுவதற்கு முன்னதாக எண்ணிப்பார்க்க வேண்டும். அவருக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்புவோம், அவருடைய பதிலை அடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நிலைமை மோசமாவதை அறிந்த ஜார்ஜ், தனது பேச்சுக்கு இன்று வருத்தம் தெரிவித்துள்ளார். "ஒருவர் என்றாலும், பலர் என்றாலும், பலாத்காரம் என்பது பலாத்காரம்தான்" என்று ஜார்ஜ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications