காவிரி தண்ணீரை நிறுத்த முயன்ற சித்தராமையா.. தடுத்த காங்கிரஸ்.. கடைசி நிமிடத்தில் நடந்த பரபரப்பு!
பெங்களூர்: தமிழகத்திற்கு தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறக்க கூடாது என சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு முடிவெடுத்து வைத்திருந்ததாகவும், ஆனால் காங்கிரஸ் மேலிடத்தின் கடும் நெருக்கடியால் தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் தண்ணீர் திறப்பை தொடரும் முடிவை சித்தராமையா கையில் எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்திற்கு, கர்நாடகாவிலிருந்து காவிரி நதிநீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கர்நாடகாவில் கலவரம் வெடித்தது. இதுகுறித்து ஆலோசிக்க, முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் சித்தராமையா கூறியதாவது: சட்ட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்த பிறகு, தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட் கூறியபடி தண்ணீரை திறந்துவிடுவது என முடிவு செய்துள்ளோம்.
இடைக்கால உத்தரவு
உச்சநீதிமன்றம் இப்போது பிறப்பித்துள்ளது ஒரு இடைக்கால உத்தரவுதான். ஆனால் நமக்கு, முக்கியமானது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், கர்நாடகா தொடர்ந்துள்ள வழக்குதான். காவிரி நடுவர் மன்றம், தமிழகத்திற்கு ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என 2007ல் தீர்ப்பளித்துள்ளது.
மனு விசாரணை
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தாக்கல் செய்துள்ள மனு, அக்டோபர் 18ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை கர்நாடகா பின்பற்றாவிட்டால் அது நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்க்கும் நமது வழக்கில் பின்னடைவை ஏற்படுத்திவிடும். எனவே நமக்கு கஷ்டம்தான் என்றபோதிலும், நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கிறோம். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
சட்டசபையை கலைக்க திட்டம்
ஆனால் இது ஒரு சப்பைகட்டு காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாக நேற்று காலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீரப்பமொய்லி, ஆஸ்கர் பெர்ணான்டஸ், ஹரிபிரசாத் உள்ளிட்டோருடன் சித்தராமையா தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது காவிரியில் தண்ணீர் திறப்பதை நிறுத்திவிட்டு, சட்டசபையையும் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாராகியுள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்.
ஆட்சி நிச்சயம்
இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் மேலிடத்திற்கு தகவல் போயுள்ளது. சோனியா காந்தி, திக் விஜயசிங் ஆகியோர் கவனத்திற்கு இந்த திட்டம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இப்படி ஆட்சியை இழந்தால் அடுத்த தேர்தலில் காங்கிரசே கர்நாடகாவில் ஆட்சியை பிடித்துவிடும். தென் மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகாதான். எனவே ஆட்சியை தக்க வைக்க இதுவே தக்க தருணம் என சித்தராமையா தரப்பு கூறியது அவர்களிடம் எடுத்து சொல்லப்பட்டது.
காங்கிரசுக்கு பின்னடைவு
இந்த திட்டத்தை மேலிடம் ஏற்கவில்லை. காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி காங்கிரஸ் அரசாங்கம் செயல்படுவது தேசிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தி, பிற மாநிலங்களில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும். உத்தர பிரதேச தேர்தல் நெருங்கும் நிலையில், இதுபோன்ற சர்ச்சையில் காங்கிரஸ் சிக்கினால், பாஜகவுக்கு அது கொண்டாட்டமாகிவிடும் என்ற மேலிடம் கூறிவிட்டது.
அமைச்சரவை கூட்டம்
இந்த முடிவை சித்தராமையாவும், கேபினட் சகாக்களும் ஏற்க முடியவில்லை என்றபோதிலும், வேறு வழியின்றி தலையை ஆட்டியுள்ளனர். நேற்று சுமார் இரண்டரை மணி நேரம் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் மேலிடம் சொல்வதை ஏற்று எப்படி வெளியே தலைகாட்டுவது என சித்தராமையா நொந்தபடி பேசியுள்ளார்.
வேறு வழியில்லாமல்
இதன்பிறகுதான், அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் வர உள்ள காவிரி விவகாரத்தை குறிப்பிட்டு மக்களை திசைதிருப்பிவிட்டு, தமிழகத்திற்கு தண்ணீர் திப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேபினட் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மேலிடம் தக்க நேரத்தில் தலையில் தட்டாவிட்டால், நேற்று நிலைமை வேறு மாதிரி போயிருக்கும் என்கிறார்கள் அக்கட்சியின் கர்நாடக மாநில நிர்வாகிகள் சிலர்.
குமாரசாமி தாக்கு
இந்த தகவல் மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி காதுகளையும் எட்டியுள்ளது. நிருபர்களிடம் குமாரசாமி கூறுகையில், இதை மறைமுகமாக குத்தி காட்டினார். டெல்லியிலுள்ள தலைவர்களுக்கு கர்நாடக விவசாயிகள் நிலை எப்படி தெரியும்.. மேலிடம் சொல்வதை கேட்டு நடக்கும் ஆட்சி மக்களுக்கு தேவையில்லை. எங்களை போன்ற மாநில கட்சி ஆட்சிதான், கர்நாடகாவுக்கு நன்மையை தரும் என்றார் அவர்.