ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இளைஞர்களை சேருமாறு வற்புறுத்திய பெங்களூரை சேர்ந்தவர் கைது
ஜெய்ப்பூர்: ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இளைஞர்களை சேரச் சொல்லி வற்புறுத்தியதாக பெங்களூரைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் மேனேஜரை ஜெய்ப்பூரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு மாநிலம் குல்பர்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது சிராஜூதின். இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சிராஜூதின் சமூக வலைதளங்கள் மூலம் உள்ளூர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேருமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மூன்று மாதமாக அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சிராஜூதினின் பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களை கண்காணித்து வந்தோம். அதன்படி அவருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இங்கிருந்து தீவிரவாதிகளுக்கு தகவல் கொடுப்பது, ஆள் சேர்ப்பது உள்ளிட்ட வேலைகளிலும் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. எனவே அவரை கைது செய்துள்ளோம். சிராஜூதினின் வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பான புத்தகம், படங்கள், வீடியோ ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை அழிக்க பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எடுத்து வரும் நிலையில் அந்த அமைப்புக்கு தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications