ஜங்கிள் புக் மோஹ்லிய போல கர்நாடகாவில் குரங்குகளின் நண்பன் சமர்த்!
ஜங்கிள் புக் கதையில் விலங்குகளின் நண்பனாக காட்டில் வலம் வரும் மோஹ்லி போல, கர்நாடகாவின் தர்வாட் மாவட்டத்தில் குரங்குகளின் நண்பனாக ஒரு மோஹ்லி வலம் வருகிறான்.
தர்வாட் : பேசக்கூடத் தெரியாத 2 வயது சிறுவன் சமர்த் பங்காரி நவீன காலத்து மோஹ்லியாக அடையாளம் காணப்படுகிறான். ஏனெனில் இவனது நண்பர்கள் யார் தெரியுமா லங்கூர் குரங்குகள் தான் அவை.
கர்நாடகாவின் தர்வாட் மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் எப்போதும் குரங்குகளுடனே விளையாடிக் கொண்டிருப்பது உள்ளூர் வாசிகளை பிரமிக்க வைத்துள்ளது. 2 வயது சமர்த் பங்காரிக்கு இன்னும் பேச்சு கூட தொடங்கவில்லை ஆனால் அவன் அந்தப் பகுதியில் உள்ள டஜன் கணக்கிலான லங்கூர் குரங்குகளின் நண்பனாக இருக்கிறான்.
வழக்கமாக குரங்குகள் மற்ற மனிதர்களைக் கண்டால் விரட்டிச் சென்று கடிக்கும், ஆனால் சமர்த் அருகில் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் இந்த குரங்குகளை பார்த்து சமர்த்தின் உறவினர்களும் ஆச்சரியப்படுகின்றனர். சமர்த்தின் பெற்றோர் வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவனுடைய நண்பர்களாக இருப்பது இந்த குரங்குக் கூட்டம் தானாம்.
மற்றவர்களை விரட்டும் குரங்குகள்
மற்றவர்களைக் கண்டாலே கடிக்கும் குரங்குகள், சமர்த்துடன் மட்டும் நட்பு பாராட்டுவது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதற்கு ஒரு காரணமும் உள்ளது, சமர்த் எப்போது அந்த குரங்குகளுடன் விளையாட வந்தாலும் தன் கையில் உள்ள உணவுகளை அவற்றுடன் பகிர்ந்து கொள்வானாம்.
அலப்பூரைச் சேர்ந்த சமர்த்
இதனால் ஒவ்வொரு நாளும் தங்களின் நண்பனை குரங்குகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பதாக சமர்த்தின் உறவினர் தெரிவித்துள்ளார். பெங்களூரில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலப்பூரில் வசித்து வருகிறான் சிறுவன் சமர்த்.
பாசப் பிணைப்பு
நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் அவனைத் தேடி வரும் குரங்குக் கூட்டம், அவன் தூங்கிக் கொண்டிருந்தால் கூட எழுப்பி விட்டு அவனுடன் 2 மணி நேரமாவது விளையாடிவிட்டு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனவாம். சமர்த் குரங்குகள் இடையேயான இந்த பிணைப்பை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
கிராம மக்கள் வியப்பு
சமர்த்துடன் விளையாட வரும் மற்ற சிறுவர்களை விரட்டி விட்டு இந்த குரங்குகள் சிறுவனுடன் விளையாடி மகிழ்வதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். குரங்குகளின் மொழி சமர்த்துக்கும், சிறுவன் சொல்ல வருவதை உணர்ந்து பரஸ்பரம் இருவரும் நட்பு பாராட்டுவதை அனைவரிடையேயும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.