பெங்களூரு குண்டுவெடிப்பில் அல்-உம்மாவுக்கு தொடர்பு? தமிழகம் விரைந்தது தனிப் படை போலீஸ்
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்ற குண்டு வெடிப்பில் கோவை குண்டுவெடிப்பில் தொடர்புள்ள அல்-உம்மா தீவிரவாதிகளுக்கு தொடர்புள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தமிழகத்திற்கு சிறப்பு போலீஸ் படை விரைந்துள்ளது.
1998ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாத அமைப்பு அல்-உம்மா. பெங்களூருவில் 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புகளிலும் அந்த அமைப்புக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் தலைவர் அப்துல் நாசர் மதானி பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே எம்ஜிரோடு பகுதியில் நேற்றிரவு நடந்த குண்டு வெடிப்பிலும் அல்-உம்மாவுக்கு தொடர்புள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏனெனில் கடந்த ஆண்டு பெங்களூருவிலுள்ள பாஜக அலுவலகம் வெளியே நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள்தான் இந்த குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாஜக அலுவலக குண்டுவெடிப்பு சம்பவத்திலும் அல்-உம்மாவுக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. எனவே, அதே அமைப்புதான் இந்த குண்டுவெடிப்பிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குண்டு வைத்த தீவிரவாதிகள் தமிழகத்திற்கு அல்லது ஆந்திராவிற்கு தப்பியோடியிருக்கலாம். அவ்வாறு தப்பியோடினால் பெங்களூருவின் அருகேயுள்ள நகரங்களில்தான் அவர்கள் தங்கியிருக்க கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே பெங்களூருக்கு அருகாமையிலுள்ள ஒசூர், கிருஷ்ணகிரி நகரங்களுக்கும், ஆந்திராவின் குப்பம் நகருக்கும் சிறப்பு போலீஸ் படைகள் விரைந்துள்ளன.