நாங்க இருக்கிறோம்.. கவலைப்பட வேண்டாம்.. கார்த்திக்கு கோர்ட் வளாகத்தில் நம்பிக்கை தந்த ப.சிதம்பரம்
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்த ப.சிதம்பரம் நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார்.
டெல்லி: டெல்லி நீதிமன்ற வளாகத்தில் கார்த்தி சிதம்பரத்திடம் 'எதற்கும் கவலைப்பட வேண்டாம்.. நாங்க இருக்கிறோம்.. நம்பிக்கையோடு இருக்கவும்' என அவரது தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நம்பிக்கை அளித்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஒருநாள் சிபிஐ காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது லண்டன் பயணத்தை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பிய அவரது தந்தை ப. சிதம்பரம், தாயார் நளினி சிதம்பரமும் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர்.

பெற்றோரை விசாரணை அதிகாரி முன்னிலையில் சந்தித்து பேச கார்த்தி சிதம்பரத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அப்போது, எதற்கும் கவலைப்பட வேண்டாம். நான் உன்னுடன் இருக்கிறேன்.. தைரியமாக இரு என நம்பிக்கை அளிக்கும் வகையில் ப.சிதம்பரம் கார்த்தியிடம் கூறினார்.
முன்னதாக நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும் போது, சிபிஐ வழக்கறிஞரிடம் அதிகாரிகள் தந்த உணவு படு மோசமாக இருந்தது என கார்த்தி சிதம்பரம் புகார் தெரிவித்தார். மேலும் தமது நண்பர்களிடம் கார்த்தி சிதம்பரம் பேச முயன்றார். ஆனால் சிபிஐ அதிகாரிகள் தடுத்ததுடன், தமிழில் பேசாதீங்க.. இங்கிலீஷில் பேசுங்க என்றார். இதற்கு கார்த்தி சிதம்பரம், என்னை சுற்றி இருக்கும்போது கூட நீங்க உங்க சக அதிகாரிகளிடம் ஆங்கிலத்தில்தான் பேசுகிறீர்கள் என்றார் கார்த்தி. ஆனால் சிபிஐ அதிகாரியோ, நீங்க இருப்பது எங்க கஸ்டடியில் என பதில் கூறினார்.












Click it and Unblock the Notifications