கார்த்தி சிதம்பரத்தை 5 நாட்கள் விசாரிக்க சிபிஐக்கு கோர்ட் அனுமதி
கார்த்தி சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் முறைகேடாக அன்னிய முதலீடு பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். பின்னர் டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.
கார்த்திக்கு ஒருநாள் காவல்
அப்போது 15 நாட்கள் கார்த்தி சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் ஒருநாள் மட்டுமே அனுமதி வழங்கியது.
கார்த்தி மீது சிபிஐ புகார்
இதையடுத்து இன்று மீண்டும் கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை; அவர் இரவு முழுவதும் மருத்துவமனையில் தங்கியிருந்தார். அவரை 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மீண்டும் சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
5 நாட்கள் சிபிஐ காவல்
இதற்கு கார்த்தி சிதம்பரம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் கார்த்தி சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது நீதிமன்றம்.
நீதிமன்றத்தில் ப.சிதம்பரம்
மேலும் ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இன்றைய விசாரணையின் போது கார்த்தியின் தந்தை ப. சிதம்பரம், தாயார் நளினி சிதம்பரம் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர்.