காஷ்மீரில் 4 மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பியது !
காஷ்மீரில் 4 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மக்கள் அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காஷ்மீர்: காஷ்மீரில் கடந்த 4 மாதங்களாக நிலவி வந்த பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று வழக்கம்போல் இயங்கத் தொடங்கின.
கடந்த ஜீலை மாதம் காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வாணி சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 86 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், கடைகள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் ஆகியவை மூடப்பட்டன.
இதனிடையை பிரிவினைவாதிகளும் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பிரிவினைவாதிகள் தங்கள் போராட்டங்களை வார இறுதி நாள்களில் நிறுத்தி வைப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல்முறையாக அலுவலகங்கள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் திறந்திருந்தன. ஸ்ரீநகரில் சாலைப் போக்குவரத்து அதிகரித்திருந்தது. இதனால் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொண்டனர்.