வெள்ளத்தில் பரிதவித்த மக்களின் கோபம்... ராணுவ வாகனங்கள் மீது கல்வீச்சு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரமாக வெள்ளத்தில் சிக்கி பரிதவித்து வரும் மக்களின் நிலை மோசமாகியுள்ளது. பலர் உதவி கிடைக்காமல் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.இந்த நிலையில் தங்களின் விரக்தியையும், கோபத்தையும் அவர்கள் ராணுவம் மீது காட்டியுள்ளனர்.
இத்தனைக்கும் ராணுவம்தான் கடுமையான சூழலுக்கு மத்தியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது மக்கள் கோபத்தைக் காட்டியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 மணி நேரமும் கடுமையாக சுழன்று சுழன்று பணியாற்றி வரும் ராணுவத்தினர் மீது மக்கள் கோபத்தைக் காட்டியிருப்பதற்கு மெத்தனமான அரசு நிர்வாகம் மீதான அதிருப்தியே காரணம் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீநகரில் கல்வீச்சு
இன்று ஸ்ரீநகரில் ராணுவ வாகனங்கள் வந்தபோது மக்கள் அவற்றின் மீது கல்வீசித் தாக்கினர். அந்த வாகனங்களில் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் இருந்தன.
படகுகள் பறிப்பு
மேலும், சிலர் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்துவதற்காக வைத்திருந்த உபரி படகுகளையும் பறித்தனர்.
ஹெலிகாப்டருக்கும் ஆபத்து
இன்று காலையும் கூட இப்படித்தான் உதவிப் பொருட்களுடன் விமானப்படை ஹெலிகாப்டர்களை, அரசியல்வாதிகள் வருகிறார்கள் என்று நினைத்து மக்கள் கல்வீசித் தாக்க முயன்றதால் ஹெலிகாப்டர்கள் இறங்காமலேயே சென்று விட்டன.
ராணுவ தளபதி விளக்கம்
இதுகுறித்து ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் இதுகுறித்துக் கூறுகையில், மக்களின் கோபம், விரக்தி நியாயமானதே. 2 வாரமாக அவர்கள் தண்ணீரில் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களில் கடைசி நபரை மீட்கும் வரை நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றார்.
சப்ளையில் மந்தம்
மக்களின் கோபத்திற்குக் காரணம் உணவு, குடிநீர், மருந்து போன்றவை வருவதற்கு மிகவும் தாமதம் ஏற்படுவதே என்று கூறப்படுகிறது.
படகு மீது தாக்குதல்
கடந்த புதன்கிழமையன்று ஒரு பிரிவினர் படகில் வந்த மீட்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் அதில் வந்த ஒருவர் காயமடைந்தார்.
விஐபிகளுக்கு சலுகையா
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில், விஐபிகளுக்கு மட்டும் முன்னுரிமை காட்டவில்லை. அனைத்து மக்களும் சமமாகவே பாவிக்கப்படுகிறார்கள் என்று மக்களை அமைதிப்படுத்தும் வகையில் கூறியுள்ளார்.