காஷ்மீர் கலவரத்தில் 2,309 பொதுமக்கள், 3,550 பாதுகாப்பு படையினர் படு காயம்- மத்திய அமைச்சர் தகவல்
காஷ்மீர்: காஷ்மீர் கலவரங்களின் போது நடந்த போராட்டங்கள் மற்றும் கல்வீச்சு சம்பவங்களுகளில் பாதுகாப்பு படையினர் 3,550, பொதுமக்கள் 2,309 மக்களும் காயமடந்துள்ளனர் என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி வானி பாதுகாப்பு சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் கலவரம் வெடித்தது. ஆங்காங்கே வன்முறையும், கலவரமும் தொடர்ந்து நடந்து வந்தது.
இதனையடுத்து காஷ்மீரின் பிற பகுதிகளுக்கும் கலவரமும் வதந்திகளும் பரவாமல் இருக்க ஜம்மு-காஷ்மீர் முழுவதும் கடந்த 17 நாட்களாக செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டன.
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்குள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்து அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். தற்போது ஜம்மு பகுதியில் மீண்டும் இயல்புநிலை திரும்பி வரும் நிலையில் அங்கு 17 நாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவை நேற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு
இதையடுத்து, ஸ்ரீநகரில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மற்றும் தடை உத்தரவுகளை ரத்து செய்யப்பட்டது. இதேபோல், அனந்நாக் மாவட்டத்தை தவிர்ந்து மற்ற மாவட்டங்களில் நேற்று படிப்படியாக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டன.
மீண்டும் வெடித்த மோதல்
இந்நிலையில், இன்று சில பகுதிகளில் பாதுகாப்பு படையினருக்கும் பிரிவினவாத இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கும் இடையில் மோதல் மீண்டும் மோதல் வெடித்தது. மேலும், குல்காம் மாவட்டத்தில் பேரணி நடத்தப் போவதாக பிரிவினை வாத அமைப்புகள் தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
மீண்டும் ஊரடங்கு உத்தரவு
எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் குல்காம் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டத்தின் பல காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்வீச்சு சம்பவங்கள்
இதனிடையே இது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் மாநிலங்களவையில் தகவல் தெரிவித்ததாவது: ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டில் நிகழ்ந்த கலவரத்தின் போது இதுவரை மொத்தம் 1029 கல் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. பொதுமக்களில் 48 பேரும், பாதுகாப்பு படையினர் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
2015-போராட்டங்கள்
கடந்த 2015-ம் ஆண்டு பேராட்டங்கள் கல்வீச்சு என 730 சம்பவங்கள் ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்துள்ளன. அதில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர். பொதுமக்கள் 240 பேரும், பாதுகாப்பு படையினர் 886 பேரும் காயமடைந்தனர்.2015-ம் ஆண்டில் 208 முறை பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. அதில் 39 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
30 வீரர்கள் பலி
இந்த ஆண்டில் கடந்த ஜூலை 17-ந் தேதி வரை முடிய 152 பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 30 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் 2,309 பேர், பாதுகாப்பு படையினர் 3,550 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மேலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தருணங்களில் கடுமையான ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
ஊடுருவல் முயற்சி
மேலும் பாகிஸ்தானிலிருந்து ஜம்மு காஷ்மீருக்குள் 90 முறை பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதில் 54 முறை அவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவினர். 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் 26 பேர் தப்பிவிட்டனர் என்று தகவல் அளித்துள்ளார்.