மோடிக்கு பெண் குழந்தைகள் போட்டோக்களை அனுப்பாதீர்கள்: மாதர் சங்க நிர்வாகி சர்ச்சை கருத்து
டெல்லி: இளம் பெண்களை உளவு பார்க்கும் நரேந்திர மோடிக்கு, உங்கள் மகள்களின் போட்டோக்களை அனுப்பாதீர்கள் என்று அகில இந்திய பெண்கள் முன்னேற்ற சங்க (AIPWA) செயலாளர் கவிதா கிருஷ்ணன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண் குழந்தைகளின் மதிப்பை மக்கள் உணருவதற்காக, செல்ஃபி எனப்படும் தற்போதைய டிஜிட்டல் புரட்சியை கையில் எடுத்தார் பிரதமர் மோடி. தங்கள் மகள்களுடன் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து அதை என்னுடன் ஷேர் செய்யுங்கள் என்று மோடி கூறினார்.
இதையடுத்து #SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்ட் ஆகும் அளவுக்கு அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், அகில இந்திய பெண்கள் முன்னேற்ற சங்க (AIPWA) செயலாளர் கவிதா கிருஷ்ணன் டிவிட்டரில் இதுகுறித்து கூறிய ஒரு கருத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Careful before sharing #SelfieWithDaughter with #LameDuckPM. He has a record of stalking daughters.
— Kavita Krishnan (@kavita_krishnan) June 28, 2015
அவர் கூறியுள்ளதாவது: மோடியுடன், மகள்களின் போட்டோக்களை ஷேர் செய்யும் முன்பு எச்சரிக்கையாக இருங்கள். அவர் மகள்களை உளவுபார்த்தவர். இவ்வாறு அந்த டிவிட்டில் கூறியுள்ளார். குஜராத்தில், மோடி முதல்வராக பதவி வகித்தபோது, ஒரு பெண் தொலைபேசி அழைப்புகளை காவல்துறை உளவு பார்த்ததை கவிதா இவ்வாறு மறைமுகமாக கூறியுள்ளதாக தெரிகிறது.
ஆனால், இதற்கு பலதரப்பட்டவர்களும், பாஜக ஆதரவாளர்களும் டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளனர். "முதுகெலும்பில்லாத கவிதா கிருஷ்ணன், தன்னை பெண்கள் உரிமைக்கான போராளி என்று கூறிக்கொள்பவர். இதுபோல, கீழத்தரமான கவன ஈர்ப்புகளில் ஈடுபட வேண்டாம்" என்று ஒருவர் கூறியுள்ளார்.
மோடியால் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆரம்பிக்கப்பட்டது என்பதாலேயே கண்ணை மூடிக்கொண்டு, வெறுப்பை காண்பிப்பது சரியல்ல என்று மற்றொருவர் கூறியுள்ளார். இருப்பினும் பிரதமருக்கு எதிரான இந்த கருத்து தொடர் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.