போலாவரம் திட்டம்.. 4 மாநில முதல்வர்கள் கூட்டத்துக்கு கே.சி.ஆர். கோரிக்கை!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். அப்போது தெலுங்கானா பகுதியில் அமைய இருக்கும் போலாவரம் அணைக்கட்டு திட்டத்துக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு பிரதமரிடம் எதிர்ப்பை தெரிவித்தேன். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஒடிஷா, சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் ஆந்திரா பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் 4 மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன் என்றார்.
மேலும் "எதிர்ப்பையும் மீறி போலாவரம் நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு, அவசர சட்டம் கொண்டு வந்தால், அதை கடுமையாக எதிர்ப்போம். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தில் மாற்று வழிகளை கையாள வேண்டும்' என்றார்.