வாக்கு பதிவு எந்திர “டெமோ” – ஒருவழியாக மோசடியில்லை என்று நம்பினார் கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த மோசடியும் நடக்க வாய்ப்பு இல்லை என்பதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் செயல் விளக்கம் அளித்தனர்.
டெல்லி சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி நடந்திருப்பதாக புகார் கூறினார்.
டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் 4 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சோதித்த போது, அவற்றில் எந்த பட்டனை அழுத்தினாலும் பா.ஜ.க சின்னத்தில் விளக்கு எரிந்ததாக அவர் கூறியிருந்தார்.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் முரண்பாடுகளை ஒரு வாக்காளர் எவ்வாறு கண்டுபிடிக்க முடியும் என ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் கெஜ்ரிவால் நேற்று தனது கட்சியினருடன் தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திர செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் விரிவாக செயல்விளக்கம் அளித்தனர்.
இதற்காக 2006 ஆம் ஆண்டுக்கு பிந்தைய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 3 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 4 ஓட்டுப்பதிவு எந்திரங்களும் எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றில் மோசடி செய்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.
இந்த எந்திரங்களின் செயல்பாடு மற்றும் ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் எவ்வாறு பொது பார்வையாளர்கள் முன்னிலையில் பத்திரமாக எடுத்து செல்வது உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்படும் கோளாறுகள் அனைத்தும், தொழில்நுட்ப கோளாறுகள் மட்டுமே என்றும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.
இதை கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஏற்றுக்கொண்டனர். இது தொடர்பான விளக்கத்தில் ஆம் ஆத்மி பிரதிநிதி ஒருவர் கையெழுத்து போட்டார்.