மீண்டும் 'வீதி'க்கு வருகிறார் கேஜ்ரிவால்! நில ஆர்ஜித சட்டத்துக்கு எதிராக ஏப். 22-ல் பேரணி!!
டெல்லி: மத்திய அரசின் நிலம் ஆர்ஜித சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 22-ந் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மத்திய அரசு நிலம் ஆர்ஜித அவசர சட்டத்தை மாற்றி நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்துக்கான மசோதாவை தாக்கல் செய்தது. லோக்சபாவில் இம்மசோதா நிறைவேறியது.
ஆனால் ராஜ்யசபாவில் இன்னும் இம்மசோதா நிறைவேறவில்லை. இந்நிலையில் நில ஆர்ஜித அவசர சட்ட மறுபிரகடனத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனிடையே நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஏப்ரல் 22-ந் தேதி பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்விந்த் கேஜ்ரிவால் 2-வது முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்றப் பின்னர் அவர் தலைமையில் நடைபெறவுள்ள முதல் போராட்டம் இது. டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி இந்த பேரணி நடத்தப்பட உள்ளது.