கெஜ்ரிவால் கையில் எடுத்த "டீனா".. டிக் அடித்து ஓகே சொன்ன டெல்லி மக்கள்.. பிரமாதம்!
Recommended Video
டெல்லி: டெல்லியில் 3-ஆவது முறையாக முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பதற்கு அவரது வளர்ச்சி திட்டங்கள் என்றாலும் அவரது பிரசார யுக்தியும் காரணமாக சொல்லப்படுகிறது.
டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியே தொடரும் என தேர்தல் கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
இன்றைய தினம் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில் 50 இடங்களுக்கு மேல் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது.
தூண்டி விடுதல்
தலைநகர் டெல்லியில் ஆட்சியை பிடிக்க மும்முனை போட்டி நிலவியது. மத்தியில் 2-ஆவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில் டெல்லியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. ஷாகீன் பாக்கில் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்தை கெஜ்ரிவால் தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டியது.
ஷாகீன் பாக் போராட்டம்
மேலும் ஷாகீன் பாக் போராட்ட கள மக்களுக்கு கெஜ்ரிவால் பிரியாணி பொட்டலங்களை வாங்கித் தருவதாகவும் விமர்சனம் செய்தது. ஆனால் இது போன்ற குற்றச்சாட்டுகளை பற்றி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டு கொள்ளவேயில்லை. ஆனால் கெஜ்ரிவால் கேட்ட கேள்வி பாஜகவுக்கு சுறுக்கென குத்தியது. அவர் கேட்டது பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார்?
பேடிக்கு சாதகம் இல்லை
அது தெரிந்தால்தானே மக்கள் வாக்களிக்க முடியும் என்றார். மேலும் டெல்லியில் முதல்வர் பதவிக்கு பாஜக சார்பில் வலிமையான திறமையானவர்கள் இல்லை என கூறினார். இதை அமித்ஷாவுக்கு சவாலாகவே பிரகடனப்படுத்தினார். கடந்த 2015-ஆம் ஆண்டு கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக பாஜக முன்னிலைப்படுத்தியது. ஆனால் தேர்தல் முடிவுகள் ஏதும் பேடிக்கு சாதகமாக இல்லை.
கிண்டல் வீடியோ
இந்த முறை முதல்வர் வேட்பாளரை குறிப்பிடாமல் பாஜக தேர்தலை சந்தித்தது. பாஜகவை மடக்க கெஜ்ரிவால் பயன்படுத்திய யுத்தி "டீனா" (TINA- There Is No Alternative). இந்த கேள்வியை அரவிந்த் கெஜ்ரிவால் ஒவ்வொரு முறையும் எழுப்பினார். மேலும் டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கிண்டலாக மீம்ஸ்களை தொகுத்து வீடியோவாகவும் வெளியிட்டிருந்தார்.
வாக்கு சேகரிக்க
பாஜகவோ ஷாகீன் பாக் போராட்டக் களத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ஆம் ஆத்மியை சேர்ந்தவர் என தெரிவித்தது. இதை ஆம் ஆத்மியும் கைதான நபரின் குடும்பத்தினரும் மறுத்தனர். இவை இப்படியிருக்க காங்கிரஸ் கட்சியோ வித்தியாசமான ஒரு பிரசார யுத்தியை கையிலெடுத்தது. மறைந்த முதல்வர் ஷீலா தீட்சித் பெயரை வைத்து வாக்கு சேகரிக்க முன்வந்தது.