காஷ்மீர் வெள்ளம்: உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தோம்- வங்கி அதிகாரி கண்ணீர் பேட்டி
திருவனந்தபுரம்: தங்கியிருந்த ஹோட்டலை வெள்ள நீர் சூழ்ந்து கொண்டதால், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மாடியில் பசி, பட்டினியோடு மீட்கப்படுவதற்காக காத்திருந்தோம் என்று கேரளா வங்கி அதிகாரி கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த பேய்மழைகாரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநிலமே சிதைந்து போனது.
இங்கு சுற்றுலா சென்றவர்களும் மலையேறும் பயிற்சிக்கு போனவர்களும் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடினர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை அபூர்வா போஸ் மற்றும் அவரது குழுவினர், முதல்வர் உம்மன்சாண்டியின் முயற்சியால் மீட்கப்பட்டு நேற்று முன்தினம் கேரளா திரும்பினர்.
இதுபோல மும்பையில் வங்கி அதிகாரியாக பணிபுரியும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், அவரது மனைவி வித்யா மற்றும் மகள் விபா ஆகியோர் கடந்த வாரம் காஷ்மீருக்கு இன்பச் சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.
இந்த தகவலை திருவனந்தபுரத்தில் உள்ள உறவினர்களுக்கு பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். அவர்கள் முதல்வர் உம்மன்சாண்டியிடம் கூறி, பாலசுப்பிரமணியன் குடும்பத்தை மீட்க உதவும்படி கோரினர்.
அவரும் மத்திய அரசை தொடர்பு கொண்டு பாலசுப்பிரமணியன் குடும்பத்தை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்தார். நேற்று பாலசுப்பிரமணியனும், அவரது மனைவி வித்யா, மகள் விபா ஆகியோர் கொச்சி திரும்பினர்.
விமான நிலையத்தில் அவர்களை உறவினர்கள் கட்டி அணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
காஷ்மீரில் தான் பட்ட கஷ்டங்களை பாலசுப்பிரமணியன் கண்ணீர் மல்க கூறினார்.
சினிமாக்களில் தான் திடீரென பெருவெள்ளம் வந்து ஊரையே காலி செய்யும் காட்சிகளை பார்த்திருக்கிறேன். காஷ்மீரில் இதனை நேரில் பார்த்த போது அச்சத்தில் உறைந்து போனேன். வெள்ளம் மக்களை இழுத்துச் சென்ற கோரக்காட்சியும், அதில் சிக்கி மீள முடியாமல் தவித்த மக்கள் எழுப்பிய அவல குரலும் மனதை உலுக்கியது.
ஹோட்டல் மாடியில் உயிரை கையில் பிடித்தபடி 3 நாட்கள் தவித்தோம். கை நிறைய பணம் இருந்தும் பட்டினி கிடந்தோம். இறைவனின் அருளாலும் முதல்வர் உம்மன்சாண்டியின் முயற்சியாலும் மீட்கப்பட்டு இன்று ஊர் திரும்பி உள்ளோம் என்றார்.