‘சேர்ந்து’ அமர்ந்ததால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட 9 மாணவ, மாணவிகள்... கேரளாவில்!
கோழிக்கோடு: கேரளாவில் இருபாலர் கல்லூரி ஒன்றில் வகுப்பறையில் மாணவர்களும், மாணவிகளும் அருகருகே அமர்ந்ததற்காக பேராசிரியரால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இயங்கி வருகிறது பரூக் கல்லூரி. 67 வருட பழமையான இந்தக் கல்லூரியில் மாணவர்களுக்கென தனி இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பது வழக்கம். இதனாலேயே இந்த கல்லூரி பிரபலமடைந்தது என்றும் கூறலாம்.
இந்நிலையில், நேற்று அதிரடியாக இந்தக் கல்லூரியில் படித்து வந்த 9 மாணவ, மாணவிகள் வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். காரணம், அவர்கள் வகுப்பறையில் அருகருகே அமர்ந்திருந்தது தான் எனக் கூறப்படுகிறது. மேலும், பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே மீண்டும் அவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில், ‘வகுப்பறையில் மாணவர்களும், மாணவிகளும் அருகருகே அமர்வதை அனுமதிக்க முடியாது. அது கல்லூரி விதிமுறைக்கு எதிரானது எனக் கூறி எங்களை மலையாள ஆசிரியர் வகுப்பறையில் இருந்து வெளியில் அனுப்பி விட்டார்' எனத் தெரிவித்துள்ளனர்.
67 வருட பழமையான தங்கள் கல்லூரியில் மாணவர்களும், மாணவிகளும் அருகருகே அமர வைக்கப்படும் வழக்கம் இல்லை. இதனை பாலின வேறுபாடு பார்க்கிறோம் எனக் கூறமுடியாது. தாங்கள் இவ்வாறு செயல்படுவதையே பெற்றோர்களும் விரும்புவதாக அக்கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications