ஆசிரியர் நியமனம் கோரி... தமிழக எல்லையில் கேரள அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு
அச்சன்கோவில்: அச்சன்கோவில் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நீக்க வலியுறுத்தி தமிழக -கேரள எல்லையில் கேரள கல்விஅமைச்சர் உருவ பொம்மை எரித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக -கேரளா எல்லைப் பகுதியான அச்சன்கோவில் கேரள மாநிலத்தில் உள்ளது.இங்கு சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், இரண்டு மாநிலத்திற்கும் தொடர்பு இல்லாத தனி தீவு போன்று இவ்வூர் மேற்குத்தொடர்ச்சி மலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
இங்குதான் புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலும், மணலாறு, கும்பாஉருட்டி அருவிகளும் அமைந்துள்ளது. இவ்வூருக்கு புனலூரிலிருந்து கேரளமாநில அரசு பேருந்து தினமும் அதிகாலை 6.30மணிக்கும்,மதியம் 11.மணிக்கும்,மாலை 3.30மணிக்கும் செங்கோட்டை வழியாக 3பேருந்துக்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
இவ்வூரில் 1ம் முதல் 10 ம் வகுப்புவரை 380 மாணவ,மாணவிகள் பயிலும் அரசு பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் அனைத்து வசதிகள் இருந்தும் 10 ஆசிரிய,ஆசிரியைகள் பணியாற்றவேண்டிய பள்ளியில் தற்போது 4 பேர்மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.இது குறித்து இவ்வூர் பொதுமக்கள் கேரளா அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், ஆசிரியர் நியமனம் வேண்டி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் போரட்ட குழுவினர் இணைந்து இன்று அச்சன்கோவிலில் கடையடைப்பு மற்றும் பந்த்க்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் புதிய ஆசிரியரை நியமனம் செய்ய வலியுறுத்தி மாவட்ட வனத்துறை அலுவலகம் முன்பு மறியலிலும்,முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுப்பட்டனர்.
அப்போராட்டத்தில், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அம்மாநில கல்வியமைச்சரை (அப்துர் ரெப்)கண்டித்து கோஷங்களை எழுப்பி அவரது உருவபொம்மையை அவர்கள் எரித்தனர். இதனால் அங்கு பரப்பரப்பும், பதட்டமும் உருவானது.