கன்பியூசான கம்யூனிஸ்ட் அரசு! சபரிமலையில் பெண்களுக்கு முதலில் அனுமதி.. திடீரென உத்தரவு வாபஸ்!
பம்பை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை கேரளா அரசு திடீரெ வாபஸ் பெற்றிருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் வந்து வழிபாடு செய்வர். கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பனை காண பக்தர்கள் வருவர். பம்பையில் புனித நீராடிவிட்டு யாத்திரையாக மலையேறி ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு திரும்புவர்.
சபரிமலை ஐயப்பன் தரிசனத்துக்காக பெருவழிப் பாதை எனும் மலைப்பாதையில் பக்தர்கள் நடந்தே வருவதும் வழக்கம். பம்பையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவு மட்டும் மலையில் நடப்பதும் வழக்கம். இந்த ஆண்டு மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

சபரிமலை நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நடப்பாண்டு கொரோனா கால கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான பக்தர்கள் வருகை 2 மடங்கு அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வெளிமாநில பேருந்துகள்
மேலும் சபரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநில அரசுகள் சிறப்பு பேருந்துகளை இயக்கவும் தொடங்கி உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் அறிவித்துள்ளன. மேலும் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு அனுமதி சர்ச்சை
சபரிமலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு வழிகாட்டுதல் கையேடு- ஹேண்ட்புக் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அதில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பின்படி, அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது திடீரென சர்ச்சையானது. இதனால் உடனடியாக இந்த உத்தரவை வாபஸ் பெறும் வகையில் போலீசாருக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல் புத்தகம் திரும்பப் பெறப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவு என்ன?
சபரிமலையில் பொதுவாக 10- வயதுக்கு கீழ் மற்றும் 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்குதான் அனுமதி உண்டு. ஆனால் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனை ஏற்று 2018-ம் ஆண்டு கேரளா சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இருந்தபோதும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்க கூடாது என வலதுசாரிகள் தீவிரப் போராட்டம் நடத்தினர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த கேரளா அரசு தீவிரம் காட்டியது. இதனால் கேரளாவை உலுக்கும் வகையில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications