பெண்களின் மதிப்பு அவர்களின் அழகு மட்டும்தானா?.. மீடியாவை சாடும் பெண் ஐபிஎஸ் அதிகாரி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறு உதவி எஸ்பி மெரின் ஜோசப், ஊடகங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பிடிபிடித்துள்ளார். இந்தி நாளிதழ் ஒன்று இந்தியாவின் அழகான 10 பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என்று கூறி வெளியிட்டுள்ள கட்டுரைக்குத்தான் இவ்வாறு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகங்கள் என்றாவது, அழகாக இருக்கும் ஆண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குறித்து இப்படி ஆச்சரியப்பட்டுள்ளதா என்றும் அவர் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் போட்டுள்ள பேஸ்புக் பதிவு வைரல் ஆகியுள்ளது. அதில் மெரின் ஜோசப் கூறியுள்ளதாவது:
இந்திய ஊடகங்களிடம் என்ன தவறு என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். குறிப்பாக மொழி ஊடகங்களிடம் இந்த வியாதி நிறையவே உள்ளது. பெண்களைப் பற்றியும், அவர்களின் உருவ அமைப்பு குறித்தும் அவமானகரமான வகையில் எழுதுவதே இவர்களின் வேலையாகப் போய் விட்டது. பெண்களுக்கான மதிப்பை அவர்களின் முகத்திற்கு மட்டுமே இவர்கள் கொடுக்கிறார்கள்.
நமது அதிகார வர்க்கத்தில் ஏராளமான தைரியமான, துணிச்சலான அதிகாரிகள் நிறையவே உள்ளனர். நமது மோசமான, அசிங்கமான, நல்ல, கெட்ட அரசியல் அமைப்புடன் அவர்கள் தினந்தோறும் போராடி வருகிறார்கள். மக்கள் பார்த்து வியக்கும் வகையிலான அதிகாரிகள் எத்தனையோ பேர் உள்ளனர்.
ஆனால் புத்திசாலித்தனத்தைப் பார்க்காமல் அவர்களின் அழகைப் பார்த்து வியக்கும் தன்மை மிகவும் அறுவெறுப்பாக இருக்கிறது. என்றாவது அழகான ஆண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைப் பார்த்து இவர்கள் இப்படி வியந்துள்ளார்களா... கட்டுரைதான் எழுதியிருப்பார்களா? என்று சாடியுள்ளார் மெரின் ஜோசப்.
இந்தக் கட்டுரையை தற்போது சம்பந்தப்பட்ட இந்தி நாளிதழின் இணையதளம் நீக்கி விட்டது. அந்தக் கட்டுரையில் மெரின் ஜோசப் குறித்தும் விவரித்துள்ளார் அதை எழுதியவர்.
மெரின் ஜோசப் முன்பு பல சர்ச்சைகளில் அடிபட்டு மீடியாக்களின் வெளிச்சத்தில் சிக்கியவர் ஆவார். 2015ம் ஆண்டு தனது ஜூனியர் அதிகாரியிடம் குடையைக் கொடுத்து தனக்குப் பிடிக்கச் செய்து அது புகைப்படமாக வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு எர்ணாகுளம் எம்.எல்.ஏவிடம் தனது செல்போனைக் கொடுத்து, நடிகர் நிவின் பாலியுடன் புகைப்படம் எடுக்க அவர் கேட்டுக் கொண்டதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்தப் படத்தை அவர் தனது பேஸ்புக்கிலும் போட்டார்.
ஆனால் இவை இரண்டுமே தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்கப்பட்டவை என்று மெரின் ஜோசப்பின் சகாக்கள் கூறுகின்றனர். அவர் ஒரு பெண் என்பதால் இவ்வாறு கிளப்பி விட்டதாக அவர்கள் கூறின்றனர்.
இந்த நிலையில்தான் அழகிய பெண் அதிகாரிகள் குறித்த கட்டுரையை அவர் கடுமையாக சாடி போஸ்ட் போட்டுள்ளார்.