அந்த 3 நாள் அவஸ்தை... பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் லீவ் கொடுத்த மாத்ருபூமி
பிரபல மலையாள தொலைக்காட்சி நிறுவனம் மாத்ருபூமி தனது நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 75 பெண்களுக்கு மாதவிடாயின் முதல் நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது
திருவனந்தபுரம்: மாத்ருபூமி ஊடக நிறுவனம், தனது நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 75 பெண்களுக்கு மாதவிடாயின் முதல் நாள் விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மத்ருபூமி நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மன உளைச்சல் எதுமின்றி பிற நாட்களில் வேலை செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.
பெண்களுக்கு அந்த 3 நாட்கள் அவஸ்தையான ஒன்று. அதுவும் ஊடக நிறுவனங்களில் பணி செய்பவர்களுக்கு மன அழுத்தத்துடன் உடல் பாதிப்புகளும் அதிகமாகவே காணப்படும். பலரும் இந்த நாளில் விடுமுறை எடுத்துக்கொண்டு ஓய்வு எடுக்கவே விரும்புவார்கள்.

பெண்களின் அவஸ்தை
மும்பையில் உள்ள கல்ச்சர் மெஷின் என்னும் ஊடக நிறுவனத்தில் சுமார் 75 பெண்கள் வேலை செய்கின்றனர். இந்த நிறுவனம் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களிடம் அவர்களின் மாதவிடாய் கால பிரச்னைகள் குறித்த கேள்வி எழுப்பி பதில்களை பெற்றது.

முதல்நாளில் லீவ்
பெண்களில் பெரும்பாலானோர் மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் விடுப்பு எடுத்துச் செல்ல விரும்புகிறேன் என, பதில் அளித்துள்ளனர். அந்த சமயத்தில், நிறுவனத்தின் ஆண் நிர்வாகியிடம் விடுப்பு கேட்க தயக்கமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கல்ச்சர் மெஷின் நிறுவனம் பெண் ஊழியர்கள் மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது.

ஊதியத்துடன் விடுப்பு
அதேபோல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அமைப்பான கோசுப் என்னும் நிறுவனமும் தனது பெண் ஊழியர்களுக்கு மாதவிடாயின் முதல் நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிப்பதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து, இந்த விடுப்பு அவசியமற்றது என்றும், விடுப்பு அவசியமானது என்றும் பெண்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

ஆன்லைன் மனு
பெண்களுக்கான மாதவிடாய் விடுப்பு நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் செயல்படுத்த வேண்டும். எனவே அதற்கு ஆதரவளிக்குமாறு கல்ச்சர் மெஷின் நிறுவனம் ஆன்லைன் மனுவைத் தொடங்கியது. அதற்கு சுமார் 28,000 பேர் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் 35,000 என்னும் இலக்கை அடைய இன்னும் 6,500 பேரின் கையெழுத்துக்கள் தேவைப்படுகின்றன.

மாத்ருபூமி விடுமுறை அறிவிப்பு
பெண்கள் அனைவரும் வாக்களித்தால் நாடு முழுவதும் பெண்களுக்கு அந்த மூன்று நாட்களின் முதல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை கிடைக்கும். இந்நிலையில் மாத்ருபூமி ஊடக நிறுவனம் தனது நிறுவன பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பை அறிவித்துள்ளது.

மன அழுத்தம் போகும்
மாதவிடாய் விடுமுறை குறித்து மாத்ருபூமி நிறுவனத்தின் இணை இயக்குநர் எம்.வி. ஷ்ரேயாம்ஸ், மும்பையைச் சேர்ந்த பிரபல ஊடக நிறுவனமான கல்ச்சர் மெஷின் பெண்களுக்கு மாதவிடாயின் முதல்நாளில் ஊதியத்துடன் விடுப்பு வழங்குகிறது. எனவே எங்கள் பெண் ஊழியர்களுக்கும் விடுப்பு அளிக்க முடிவு செய்தோம்.

புரிந்து கொள்வோம்
எங்கள் நிறுவனத்தில் பணி புரியும் 320 பேரில் 75 பேர் பெண்கள். இவர்கள் மன அழுத்தம் மிகுந்த பணியை இரவு பகல் பார்க்காமல் செய்கின்றனர். பெண்கள் உதவி மற்றும் ஆதரவை எதிர்பார்ப்பதில்லை. அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

சலுகை அல்ல
மாதவிடாயின் போது அவர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அவர்களுக்கு விடுப்பு அளிக்க முடிவு செய்தோம். இது பெண்களுக்கான சலுகை அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இன்ப அதிர்ச்சி
ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் நிறுவனம் எங்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது என்று மாத்ருபூமியின் பெண் ஊழியர்கள் கூறியுள்ளனர். இது பெண்கள் உரிமைகளுக்கான ஒரு வரலாற்று நகர்வு. அதன் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர். பிற நிறுவனங்களும் இதனை கவனத்தில் கொள்வார்களா?












Click it and Unblock the Notifications