கேரளாவில் தாயும், மகனும் ஒரே நேரத்தில் அரசு பணிக்கான தேர்வில் தேர்ச்சி
இன்று (11.08.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இடம்பெற்ற செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
கேரளாவில் தாய், மகன் இருவரும் ஒரே நேரத்தில் அரசு பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பிந்து என்பவர் 42 வயதில் அரசு அதிகாரியாக தேர்ச்சி ஆகியுள்ளார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பிந்து தேர்வாகியுள்ள அதே தேர்வில் அவரது 24 வயது மகனும் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது தான். பிஎஸ்சி எனப்படும் கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கேரளாவில் அரசு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படும்.
பல்வேறு பணிகளுக்கு நடத்திய தேர்வின் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில், பிந்து கிரேடு சர்வண்ட்ஸ் (எல்ஜிஎஸ்) தேர்வில் 92வது ரேங்க் எடுத்து தேர்ச்சி ஆகியுள்ளார். அதேநேரம் அவரின் மகன் விவேக், டிவிஷனல் கிளார்க் (எல்டிசி) தேர்வில் 38வது ரேங்குடன் தேர்ச்சி பெற்றுள்ளார். பிஎஸ்சி தேர்வுக்காக தாய், மகன் இருவரும் ஒன்றாகவே பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் சொல்லப்போனால், விவேக்கை அரசு பணிகளுக்கு தயாராக தாய் பிந்துவே உந்துசக்தியாக இருந்து பயிற்சி எடுக்க வைத்தாராம்.
இதற்கு முன்பு இருவரும் மூன்று முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி ஆகவில்லை. நான்காவது முயற்சியில் தான் இருவரும் ஒருசேர தேர்ச்சி ஆகியுள்ளனர். பிந்து அங்கன்வாடி ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார். இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டுள்ளார். அதேநேரம் விவேக் தினமும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டுள்ளார்.
தாய், மகன் ஒரே நேரத்தில் அரசு பணிகளுக்கு தேர்வாகியுள்ள செய்தி வைரலாகி வருகிறது.
தடையை மீறி இலங்கை துறைமுகத்துக்கு வருகிறதா சீன கப்பல்?
சீன உளவு கப்பல் இன்று தடையை மீறி இலங்கை துறைமுகத்துக்கு வந்து சேரும் என்று தகவல் வெளியாகி உள்ளதாக 'தினந்தந்தி' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா, தனது 'யுவான் வாங் 5' என்ற ஆராய்ச்சி கப்பலை இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தில், 6 நாட்கள் நிறுத்தி செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தது. இதற்கு இலங்கை அரசும் ஒப்புதல் அளித்தது.
இதற்கிடையில் சீனா ஆராய்ச்சி கப்பல் என்று கூறுவது உண்மையில் ஒரு உளவு கப்பல் என்றும் அது இலங்கையில் நிறுத்தப்படுவது இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் இலங்கை அரசிடம் இந்தியா நேரடியாக கவலையை வெளிப்படுத்தியது.
அதை தொடர்ந்து, 'யுவான் வாங்-5' கப்பலின் பயணத்தை ரத்து செய்யும்படி சீனாவிடம் இலங்கை அரசு தெரிவித்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய இலங்கையை சீனா வலியுறுத்தியது. ஆனால் இலங்கை அதை ஏற்கவில்லை. இந்த நிலையில் தடையை மீறி சீனாவின் 'யுவான் வாங் 5' கப்பல் இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தை நோக்கி புறப்பட்டது. இன்று அந்த கப்பல் ஹம்பன்தொட்டா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இது தொடர்பாக சீனா தரப்பிலோ அல்லது இலங்கை தரப்பிலோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
- சீனாவில் பரவும் புதிய வைரஸால் 35 பேர் பாதிப்பு - உலகத்துக்கு ஆபத்தா?
- நிரந்தர நாடில்லாமல் தவிக்கும் கோட்டாபய, தாய்லாந்துக்குச் செல்லத் திட்டமா?
- சதுரங்கக் காய்களில் ராஜாவின் தலையில் சிலுவைக் குறி இருப்பது ஏன்?
"ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை"
ஸ்லீப்பா் வகுப்பு மற்றும் மூன்றடுக்கு படுக்கைகளுடன் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை அளிக்க வேண்டும் என்று ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக் குழு மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளதாக 'தினமணி' செய்தி தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக நாடாளுமன்றத்தில் அந்தக் குழு சமா்ப்பித்த அறிக்கையில், கொரோனா பரவலுக்குப் பிறகு ரயில் பயணங்களில் பயணிகளுக்கு கட்டண சலுகை அளிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. மூத்த குடிமக்களுக்கு 40-50 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த நடைமுறையும் கைவிடப்பட்டது.
தற்போது ரயில்வே இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. எனவே, வெவ்வேறு வகை ரயில் பயணிகளுக்கு நியாயமான முறையில் மீண்டும் கட்டணச் சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கு ஸ்லீப்பா் வகுப்பு மற்றும் மூன்றடுக்கு படுக்கைகளுடன் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட ரயில் பயணங்களுக்காவது உடனடியாக கட்டணச் சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த நிதியில் இருந்து தேநீர் விருந்துக்கான கட்டணத்தை செலுத்திய ரணில்
இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த தேநீர் விருந்துக்கான கட்டணத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது சொந்த நிதியில் இருந்து செலுத்தியுள்ளதாக 'தமிழ் மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்துக்குப் பின்னர், அக்கிராசன உரையை ஜனாதிபதி ஆற்றினார்.
அதன்பின்னர், நாராளுமன்றத்தில் தேநீர் உபசாரம் வழங்கப்பட்டது. அதற்கு 2 லட்சத்துக்கு 72 ஆயிரம் ரூபாய் செலவானது. அதற்கான கட்டணத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது சொந்த நிதியில் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் சார்பில் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் செயலாளரான ஆஷு மாரசிங்க இதற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=sf_mWM64o7g
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்