மூணாறு நிலச்சரிவு: தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 14 பலி - 12 பேர் மீட்பு - 80 பேர் கதி என்ன?
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மூணாறு தேயிலைத் தோட்ட பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மண்ணில் புதையுண்ட மற்ற தொழிலாளர்களின் கத
மூணாறு: கேரளா மாநிலத்தில் கனமழை கொட்டி வருவதால் அங்கு இடுக்கி மாவட்டத்தில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மூணாறு அருகே தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்களின் 20 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மண்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
இந்த நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்திலிருந்து தேயிலைத் தோட்டப் பணிக்குச் சென்றவர்கள் என்றும், அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்மேற்குப்பருவமழை நாட்டின் பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா,கோவா மாநிலங்களில் பருவமழையின் தீவிரத்தினால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் - ரெட் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்
கனமழை வெள்ளம்
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருவதால் இடுக்கி, வயநாடு, மலப்புரா மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சிவன் கோவிலே மூழ்கும் அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. முல்லை பெரியாற்றில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் பெருகியுள்ளது.
மூணாறு நிலச்சரிவு
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்னும் சில நாட்களுக்கு கேரளாவில் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் மூணாறு கிராமப் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராஜமாலா வார்டில் பெட்டிமடா பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தற்காலிகக் குடியிருப்பு அமைத்து 80க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.
தொழிலாளர்கள் மரணம்
கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழையால், தனியார் எஸ்டேட் அமைந்திருக்கும் நேமக்கடா பகுதியில் இன்று அதிகாலை திடீரென மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 80க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மண்ணில் புதையுண்டனர்.
தொழிலாளர்களை மீட்க தீவிரம்
மழை விட்டுவிட்டு மழை பெய்துவருவதாலும், மழைநீர் தேங்கி இருப்பதாலும் மீட்புப் பணிகளைத் தொடர்வதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன. தொடர்மழையால் பெரியவாரை பகுதியில் பகுதியில் இருந்த ஆற்றுப்பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்குச் செல்வதில் பெரும் சிக்கல் இருந்து வருகிறது.
14 பேரின் சடலங்கள் மீட்பு
எனினும் தீயணைப்பு துறையினரும், காவல்துறை, பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக தொழிலாளர்களின் 4 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அடுத்தடுத்து 10 பேர் என மொத்தம் 14 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் இடுக்கி, வயநாடு, மலப்புரா மாவட்டங்களில் மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மண்ணில் புதைந்தவர்கள் கதி என்ன?
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் மழையும், காற்றும், காட்டாற்று வெள்ளமும் செல்வதால் மீட்புப்பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மண்ணில் புதைந்து போன பிற தொழிலாளர்கள் பற்றி அச்சம் எழுந்துள்ளது.