ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு... அருண் ஜேட்லிக்கு சானிடரி நாப்கின்களை பார்சல் அனுப்பிய மாணவிகள்!
ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாணவிகள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு சானிட்டரி நாப்கின்களை பார்சல் அனுப்பியுள்ளனர்.
திருவனந்தபுரம்:ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாணவிகள்மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு சானிட்டரி நாப்கின்களை பார்சல் அனுப்பியுள்ளனர்.
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1ந் தேதி மத்திய அரசால் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் பல்வேறு பொருட்களுக்கான வரிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே வரியாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொருட்களுக்கு ஏற்றவாறு குண்டூசி முதல் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொள்ளும் பொட்டு வரை அனைத்திற்கும் வரி.
பெண்களை அதிக அளவில் ஜிஎஸ்டி பாதித்துள்ளது. மாதவிடாய் மற்றும் குழந்தைப் பேறு காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களின் மீதான வரி 12 சதவீதம் ஆகியுள்ளது. இந்நிலையில், நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள இடதுசாரி மாணவர் அமைப்பினர் கல்லூரி வளாகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் கடந்த 11-ந் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சானிட்டரி நாப்கின்களில் "ப்ளீடு வித்அவுட் டேக்ஸ்" என்று எழுதி அவற்றை நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு மாணவிகள் அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளனர்.