கணவனை காப்பாற்றச் சென்ற கர்ப்பிணிப் பெண்... அடிதடி சண்டையில் கரு கலைந்த சோகம்!
கேரளாவில் நிலத்தகராறின் போது கணவனை தாக்குதலில் இருந்து காப்பாற்ற சென்ற கர்ப்பிணிப் பெண் வயிற்றில் அடிபட்டதில் கருகலைந்துள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம் : கேரளாவில் நிலத்தகராறில் கணவனை தாக்க வந்தவர்களிடையே நடந்த சண்டையை விலக்க சென்ற மனைவியின் 4 மாத கருகலைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஜோசனா சிபி. 30 வயது சிபி 4 மாத கர்ப்பிணியாக இருந்தாக கூறப்படுகிறது. சிபியின் கணவருக்கும் அண்டை வீட்டில் வசிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உள்ளூர் தலைவர் ஒருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் திடீரென கடந்த ஜனவரி 28ம் தேதி வீடு புகுந்த கம்யூனிஸ்ட் தலைவர் உள்ளிட்ட 7 பேர் சிபியின் கணவரை வெளியே இழுத்து வந்து தாக்கியதாக தெரிகிறது. இந்த தகராறின் போது சிபி தடுக்கச் சென்றிருக்கிறார்.
கர்ப்பிணிப் பெண் வயிற்றில் உதை
அப்போது அடியாட்கள் சிபியின் வயிற்றில் உதைத்ததில் அவருக்கு உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனைடுத்து அவர் உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட நிலையில், கருக்கலைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிபிக்கு ஏற்கனவே 5 வயது மகன் ஒருவன் உள்ளான்.
நிலத்தகராறால் ஏற்பட்ட மோதல்
இரு தரப்பினருக்கும் நிலத்தகராறு இருந்ததன் காரணமாகவே இந்த மோதல் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்கப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் தான் பாதிக்கப்பட்ட சிபி நிலத்தகராறு குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
நடவடிக்கை கோரி புகார்
சிபியின் கரு கலைந்ததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தார் பிப்ரவரி 2ம் தேதி போலீசிடம் புகார் அளித்துள்ளனர். கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் சிபி மீது தாக்குதல் நடத்தியது தவறு என்று அவர்கள் புகார் அளித்திருந்தனர்.
தொடர் மிரட்டல்கள்
இந்த சம்பவத்திற்கு காரணமான கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உள்ளூர் தலைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதனால் சிபி குடும்பத்தினருக்கு தொடர்ந்து அரசியல் கட்சியினரால் அச்சுறுத்தல்களும் வந்து கொண்டிருக்கின்றன.
தப்பியோடியவரை தேடுகிறது போலீஸ்
இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்ணை தாக்கிய சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரை தேடி வருகின்றனர்.