என்னை கடத்தி ஐஎஸ்ஐஎஸிடம் விற்க பார்த்தார்.. கணவர் குறித்து கேரள பெண் பரபரப்பு வாக்குமூலம்
கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் தன்னை விற்க பார்த்தாக பரபரப்பு வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் தன் கணவர் முகமது ரியாஸ் என்பவர் மீது போலீசில் புகார் அளித்து இருக்கிறார். புகாரில் ரியாஸ் தன்னை சவுதிக்கு கடத்தி சென்றதாக கூறியுள்ளார்.
மேலும் அங்கிருந்து தன்னை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் பாலியல் தொழிலாளியாக சேர்க்க முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். இந்த பெண்ணின் புகாரை அடுத்து போலீசார் ரியாஸை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
ரியாஸுடன் இன்னும் இரண்டு நபர்களுக்கு இந்த விஷயத்தில் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. இவர்கள் மூவரையும் கண்டுபிடிக்க கேரள போலீஸ் இண்டர்போல் உதவியை நாடி இருக்கிறது.
மிரட்டல்
கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த அந்த 24 வயது பெண் சில வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் முகமது ரியாஸ் என்பவரை சந்தித்து இருக்கிறார். கொச்சியை சேர்ந்த இவருக்கும் அந்த பெண்ணிற்கும் காதல் மலர்ந்து இருக்கிறது. ஆனால் ரியாஸ் அந்த பெண்ணுடன் இருக்கும் புகைபடங்களை காட்டி அவ்வப்போது மிரட்டி இருக்கிறார்.
கல்யாணம்
இந்த நிலையில் அந்த புகைப்படத்தை காட்டி அந்த பெண்ணை மதம் மாற சொல்லி இருக்கிறார். பின் இந்த பிரச்சனை எல்லாம் சரியாகி இருவரும் திருமணம் செய்து இருக்கிறார்கள். பின் ரியாஸ் அந்த பெண்ணை சுற்றுலா பயணிகள் விசாவில் சவுதி அரேபியாவிற்கு அழைத்து சென்றுள்ளார்.
ஐஎஸ் அமைப்பு
சவுதியில் இவர்களை முகமது சியாத், பவாஸ் ஜமால் ஆகியோர் வரவேற்று இருக்கின்றனர். மேலும் அந்த பெண்ணை மூன்று பேரும் சேர்ந்து ஒரு அறையில் கட்டிவைத்து கொடுமைபடுத்தி இருக்கிறார்கள். மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் அந்த பெண்ணை விற்க முயற்சி செய்து இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்து தன் உறவினர்கள் மூலம் அங்கிருந்து தப்பித்து மீண்டும் கேரளா வந்துள்ளார்.
தேடுதல்
தற்போது அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்து இருக்கிறார். போலீஸ் தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியையும், இண்டர்போல் உதவியையும் நாடி இருக்கிறது. மூன்றுபேரும் சவுதியில் தலைமறைவாகி இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.