கந்தஹார், நாடாளுமன்றம், பதன்கோட்: இப்படி கைவரிசை காட்டும் ரவூஃபை கைது செய்யுமா பாகிஸ்தான்?
டெல்லி: கந்தஹார் விமான கடத்தல், நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் பதன்கோட் தாக்குதலுடன் தொடர்பு உடைய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரவூஃபுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா வந்த பாகிஸ்தான் விசாரணை குழுவிடம் பதன்கோட் தாக்குதல் குறித்த அனைத்து ஆதாரங்களும் அளிக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் பார்த்த பிறகும் பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரவூஃப் விஷயத்தை நினைவுகூர வேண்டும்.
முஜாஹிதீன்களை பதன்கோட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என ரவூஃப் கூறும் ஆடியோ தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
கந்தஹார் விமான கடத்தல், நாடாளுமன்ற தாக்குதல் விஷயத்தில் ரவூஃபிற்கு எதிரான ஆதாரத்தை பாகிஸ்தானிடம் கடந்த 2002ம் ஆண்டில் ஒப்படைத்தும் அது இதுவரை எதுவும் செய்யவில்லை.
கந்தஹார் விமான கடத்தல், இந்திய நாடாளுமன்ற தாக்குதலுடன் தொடர்புடைய ரவூஃப் மீது பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர் தற்போது பதன்கோட்டில் தாக்குதல் நடத்த மூளையாக திகழ்ந்துள்ளார்.
அசார் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவராக இருந்தாலும் ரவூஃப் தான் அந்த அமைப்பை வழிநடத்தி வருகிறார். அசார் இந்தியாவில் கைது செய்யப்பட்டபோது அவரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் ரவூஃப். அதற்காக தான் அவர் கந்தஹார் விமான கடத்தலை நடத்தினார்.
விமானத்தை கடத்தி வைத்துக் கொண்டு அசாரை விடுவிக்குமாறு அவர் கோரிக்கை விடுக்க வேறு வழியில்லாமல் இந்தியாவும் விடுவித்தது. அதன் பிறகு அவர் நாடாளுமன்ற தாக்குதலை நடத்தினார். அதற்கான ஆதாரங்களை இந்தியா பாகிஸ்தானிடம் அளித்தும் பலன் இல்லை. தற்போது பதன்கோட் தாக்குதலிலும் அவர் பெயர் தான் அடிபடுகிறது.