100க்கு போன் செய்து தற்கொலை செய்ய முயன்ற தந்தையை காப்பாற்றிய 10 வயது சிறுமி
கொல்கத்தா: கொல்கத்தாவில் 10 வயது சிறுமி 100 எண்ணுக்கு போன் செய்ததால் தற்கொலை செய்ய முயன்ற அவரின் தந்தை காப்பாற்றப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் ராஜீவ் கன்னா(37). தொழில் அதிபர். அவரது மனைவி ஷிகா. அவர்களின் மகள் ராஷி(10) கொல்கத்தா பப்ளிக் ஸ்கூலில் படித்து வருகிறார். ராஜீவ் கன்னாவுக்கும் மனைவிக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது.
இந்நிலையில் கன்னா வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்த ஷிகா கதறி அழ ராஷிக்கு என்ன செய்வது என முதலில் தெரியவில்லை. அதன் பிறகு அவர் 100க்கு போன் செய்து என் தந்தை தற்கொலை செய்ய தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளார் என்று அழுதுக் கொண்டே கூறினார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலில் 40 சதவீதம் தீக்காயங்களுடன் மயங்கிக் கிடந்த ராஜீவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவசர உதவிக்கு 100க்கு போன் செய்யவும் என மெட்ரோ ரயில் நிலையங்களில் விளம்பரம் செய்வதை வைத்து ராஷி போலீசாருக்கு போன் செய்துள்ளார்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
சிறுமி போன் செய்ததும் யாரோ விளையாட்டிற்கு செய்கிறார்கள் என்று நினைத்தோம். இருப்பினும் அதை கண்டுகொள்ளாமல் இருக்காமல் சம்பவ இடத்திற்கு உடனே கிளம்பிச் சென்றபோது தான் சிறுமி கூறியது உண்மை என்பது தெரிய வந்தது என்றனர்.