பெற்றோரின் சடலத்துடன் 2 நாட்கள் தனியாக இருந்த 1 வயது குழந்தை
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஒரு வயது ஆண் குழந்தை ஒன்று தூக்கில் பிணமாகத் தொங்கிய தனது பெற்றோருக்கு அருகே அமர்ந்து அழுது கொண்டே இரண்டு நாட்களை கழித்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்தவர் மஞ்சுநாதா. அவரின் மனைவி மீனாக்ஷி. அவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. மஞ்சுநாதா தனது மனைவி, குழந்தையுடன் ஹைதராபாத் ஜூடிமெட்லா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 5 மாதங்களாக அவர்கள் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். மஞ்சுநாதா குகட்பள்ளியில் உள்ள ஆதீஷ்வர் எலக்ட்ரானிக்ஸில் விற்பனை பிரிவிலும், மீனாக்ஷி அதே பகுதியில் உள்ள ஹைபர் மார்ட்டிலும் பணியாற்றி வந்துள்ளனர்.
அவர்களுக்கு பண பிரச்சனை இருந்துள்ளது. இதனாலேயே அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்யும் முன்பு கன்னடத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்தனர்.
வியாழக்கிழமை குழந்தை அழது கொண்டே இருக்கும் சப்தம் கேட்ட தரை தளத்தில் வசிக்கும் வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. வெள்ளிக்கிழமையும் குழந்தையின் அழுகுரல் தொடர்ந்து கேட்கவே அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு மாடி வீட்டுக்கு சென்றார். அங்கு மஞ்சுநாதாவும், அவரது மனைவியும் தூக்கில் பிணமாகத் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை குகட்பள்ளியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.