டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி - அமித்ஷா அறிவிப்பு
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளராக கிரண்பேடி போட்டியிடுவார் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பா.ஜ.க.வின் நாடாளுமன்ற குழு கூட்டத்திற்கு பிறகு அமித்ஷா இதனை அறிவித்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது டெல்லி சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசிய தலைவா அமித்ஷா, கிரண்பேடியின் தலைமையில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் என தெரிவித்தார். கிரண்பேடி டெல்லியில் கிருஷ்ணா நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அறிவித்தார்.
டெல்லியில் நடந்த பாஜக தேர்தல் குழு கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும், இதில் டெல்லி பாஜக தலைவர்களிடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., முதல்வர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி என தெரிவித்தார்.
பாஜகவின் பாரம்பரிய தொகுதி
கிருஷ்ணாநகர் தொகுதி பாஜகவின் பாரம்பரியம் மிக்க தொகுதியாகும். கடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹர்சவர்த்தன் வெற்றி பெற்றார். பின்னர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட ஹர்சவர்த்தன் தற்போது மத்திய அமைச்சராக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை தேர்தல்
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் களம் காண்கிறார்.
களமிறக்கிய பாஜக
டெல்லி சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க யாரை நிறுத்த போகிறது என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், முதல்வர் வேட்பாளராக கிரண்பேடியை பா.ஜ.க. களம் இறக்கியுள்ளது.
எதிரும் புதிருமாக
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி, அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இவர் அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.
அனல் கிளப்பும் பிரச்சாரம்
அர்விந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி இருவருமே ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள். இப்போது இருவரும் தேர்தல் களத்தில் முதல்வர் வேட்பாளர்களாக எதிரும் புதிருமாக களமிறங்குவதால் டெல்லி தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.