கொல்லம் அருகே பழமையான இரும்பு நடைபாலம் உடைந்து விபத்து - ஒருவர் பலி, 57 பேர் காயம்
கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே ஆற்றின் குறுக்கே இருந்த பழமையான இரும்பு நடை மேம்பாலம் உடைந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியானதுடன் 57 பேர் காயமடைந்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவாரா என்ற பகுதியின் அருகே ஆற்றின் குறுக்கே மக்கள் கடப்பதற்காக பழமையான நடைமேம்பாலம் இருந்தது. இந்நிலையில், இன்று காலை அந்த பாலத்தில் அதிகமானோர் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென பாலம் உடைந்து சரிந்து விழுந்தது.
இதனால், பாலத்தில் சென்று கொண்டிருந்த அதிகமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர். இதனையடுத்து, விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார் ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒருவர் பலியானதாகவும், 57 பேர் காயங்களுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.