''தரவுகளை பாருங்கள் புரியும்..கும்பமேளா கொரோனா 'சூப்பர்-ஸ்ப்ரெடர்' இல்லை''.. உயர் அதிகாரி சொல்கிறார்
ஹரித்வார்: கும்பமேளாவை "சூப்பர்-ஸ்ப்ரெடர்" என்று அழைப்பது நியாயமற்றது என்று கும்பமேளா போலீஸ் உயர் அதிகாரி சஞ்சய் குன்ஜால் கூறினார்.
இந்தியா முழுவதும் முதல் அலையை விட இரண்டாவது அலை பாடாய்படுத்தி விட்டது தற்போது கொரோனா தொற்று குறைந்து ஆறுதல் அளிக்கிறது.
ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என்று நாடே அல்லாடி கொண்டிருந்தது.
உத்தரகண்ட்டில் ஒரே மாதத்தில் 1800% அதிகரித்த கொரோனா.. சூப்பர் ஸ்ப்ரெட்டரான கும்பமேளா.. ஷாக் தகவல்
கும்பமேளாதான் காரணம்
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலைக்கு ஹரித்துவார் கும்பமேளாதான் காரணம் என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினார்கள். இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ஹரித்துவார் நகரில் லட்சக்கணக்கான இந்து பக்தர்கள் கும்பமேளா திருவிழாவுக்காக கூடினார்கள். கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டு திரும்ப வந்தவர்களில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்றும் அவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவியது என்று புகார்கள் கூறப்பட்டு வருகிறது.
"சூப்பர்-ஸ்ப்ரெடர்" அல்ல
இந்த நிலையில் கும்பமேளாவை "சூப்பர்-ஸ்ப்ரெடர்" என்று அழைப்பது நியாயமற்றது என்று கும்பமேளா போலீஸ் உயர் அதிகாரி சஞ்சய் குன்ஜால் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை ஹரித்வார் மாவட்டத்தில் 8.91 லட்சம் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டது. இதில் பாஸிட்டிவ் விகிதம் 1,954 (0.2 சதவீதம்) மட்டுமே. ஜனவரி 1 முதல் கும்பமேளா நிகழ்வு முடிவடையும் வரை ஹரித்வாரில் நடத்தப்பட்ட மொத்த ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளில் நேர்மறை விகிதம் வெறும் 0.2 சதவீதம் மட்டுமே இதை கோவிட் "சூப்பர் ஸ்ப்ரெடர்" என்று அழைப்பது நியாயமற்றது.
தரவுகள் காட்டுகின்றன
கும்பமேளாவை ஒரு சூப்பர் ஸ்ப்ரெடர் நிகழ்வாக கருத முடியாது என்பதற்கான மற்றொரு காரணத்தையும் நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது. அதாவது கும்பமேளா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 16,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினரில் 88 பேர் மட்டுமே ( 0.5 சதவீதத்திற்கு சற்று மேல்) ஏப்ரல் 30-க்குள் கொரோனாவுக்கு நேர்மறை தொற்றை கண்டறிந்துள்ளனர்.
ஏற்கனவே பரவியது
ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி கும்பமேளா நிகழ்வு முடியும் வரை ஹரித்வார் மாவட்டத்தின் கோவிட் 19 தரவை விஞ்ஞானரீதியாக ஆராய்ந்தால் கும்பமேளா தொற்றுநோயை பரவக்கூடியது அல்ல என்ற விவரம் தெளிவாக தெரியவரும். கும்பமேளாவின் முக்கிய நிகழ்வு ஏப்ரல்1-ம் தேதி தொடங்கியபோது மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே கொரோனா தொற்று அதிகமாக இருந்தது என்று சஞ்சய் குன்ஜால் தெரிவித்தார்.