"என்னால் பலனடைந்ததை ராகுல் மறுக்கமுடியுமா?"..அரசியலில் அணுகுண்டை கொளுத்திப் போடும் லலித் மோடி...
லண்டன்: எனது விருந்தோம்பல் மூலம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பலனடைந்ததை அவர் மறுக்க முடியமா என்று லலித் மோடி தனது ட்விட்டரில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
பல்வேறு அரசியல் தலைவர்களுடனான தொடர்பை அம்பலப்படுத்தி வரும் ஐ.பி.எல். முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டுக்குள்ளான லலித் மோடி தற்போது ராகுல் காந்தியுடனான சந்திப்பையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
தான் ஐ.,பி.எல். ஆணையராக இருந்த போது, ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா, கணவர் வதேரா ஆகியோர் என்னை சந்தித்து தனது விருந்தோம்பலை பெற்றனர் என்று கூறியுள்ள லலித் மோடி, அந்த புகைப்படத்தையும் அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
மனைவியின் சிகிச்சைக்காக போர்ச்சுகல் செல்வதற்கு பயண ஆவணங்கள் பெற வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவியுள்ளதாக காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், தற்போது ராகுல் காந்தி தன்னை சந்தித்ததாக லலித் மோடி வெளியிட்டுள்ள புகைப்படம் இந்திய அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
ஆனால் இதனை ராகுல் காந்தி மறுத்துள்ளார். லலித் மோடியை எங்கள் குடும்பத்தை சார்ந்த யாரும் சந்தித்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எந்த சூழ்நிலையில் லலித் மோடியை ராகுல், பிரியங்கா, வதேரா சந்தித்ததில்லை என்றும், அவரது விரும்தோம்பலையும் பெற்றதில்லை எனவும் தெரிவித்துள்ளது. லலித்மோடி சொன்னதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் கூறும்போது, சோட்டா மோடி, படா மோடிக்கு உதவும் புகைப்படங்களே இவை. இதன் மூலம் ஆளுங்கட்சிக்கு அவர் உதவுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.