கடல் மார்க்கமாக இந்தியாவைத் தாக்க லஷ்கர் திட்டம்.. ஐபி எச்சரிக்கை
டெல்லி: கடல் மார்க்கமாக இந்தியாவில் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டு வருவதாக சமீபத்திய ஐபி அறிக்கை மத்திய அரசை எச்சரித்துள்ளது.
குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தான் படகு வீழ்த்தப்பட்ட விவகாரம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், விவாதங்கள் நடந்து வரும் நிலையில், லஷ்கர் இ தொய்பா அமைப்பு புதிய தாக்குதல்களை திட்டமிட்டு வருவதாக ஐபி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் ஐபி தரப்பில் மத்திய உள்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கையில், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கடற் பிரிவானது, புதிய திட்டங்களை தீட்டி வருகிறது. அதன்படி இந்தியாவின் கடற்படை தளங்கள், பிற முக்கிய இடங்களைத் தாக்கும் வகையில் கடல் மார்க்கமாக தீவிரவாதிகளை அனுப்ப அது திட்டமிட்டுள்ளதாம்.
இந்த எச்சரிக்கையான கிரேட் ஏ அலர்ட் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அதி நம்பகத்துக்குரிய எச்சரிக்கை என்று பொருளாம்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி குஜராத்துக்கு அருகே பாகிஸ்தான் படகு சிக்கிய சம்பவம் இருக்கலாம் என்றும் ஐபி கூறுகிறது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் லஷ்கரின் திட்டத்தில் இது ஒரு பகுதிதான் என்று பாதுகாப்புப் படையினர் நம்புகின்றனர்.
மேலும் கடந்த 26/11 தாக்குதலின்போது எப்படி பாகிஸ்தான் கடற்படை தீவிரவாதிகளுக்கு உதவியாக இருந்ததோ, அதேபோல இந்த முறையும் பாகிஸ்தான் கடற்படை ஆதரவுடன் தீவிரவாதிகள் தங்களது சதிச் செயலை அரங்கேற்ற முனையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 26/11 தாக்குதலுக்கு முன்பாக தனது தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் கடற்படையினரிடம் தீவிர பயிற்சி பெற்று பின்னரே லஷ்கர் அமைப்பு, மும்பைக்கு படகு மூலம் தீவிரவாதிகளை அனுப்பியது என்பது நினைவிருக்கலாம்.
இந்தியாவுக்குள் எளிதாக ஊடுறுவ கடல் மார்க்கமே சிறந்தது என்பதால் இந்தத் திட்டத்தை லஷ்கர் இ தொய்பா தொடர்ந்து தனது முதல் சாய்ஸாக வைத்திருப்பதாகவும் ஐபி கூறுகிறது.












Click it and Unblock the Notifications