கோவாவில் 'ஸ்கை ஜம்ப்' சோதனைக்குத் தயாராகும் கடற்படை எல்சிஏ விமானம்
பெங்களூரு: இந்திய கடற்படை வரலாற்றில் புதிய அத்தியாயமாக, கடற்படையின் இலகு ரக போர் விமானமான நேவல் புரோட்டோடைப் 1 (NP-1) கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சா கடற்படைத் தளத்தில் ஸ்கை ஜம்ப் சோதனையில் ஈடுபடவுள்ளது.
கோவாவில் நடைபெறவுள்ள இந்த வெள்ளோட்டத்திற்கு முன்னோட்டமாக, பெங்களூரு எச்ஏஎல் விமான நிலையத்தில் ஏற்கனவே பலமுறை இந்த விமானமானது ஓட்டி பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஒன்இந்தியாவுக்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஒரு அதிகாரி கூறுகையில், தற்போது விமானம் நல்ல நிலையில் உள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 முறை விமானத்தை ஓட்டி பரிசோதித்துள்ளோம். குறிப்பிட்ட வேகம், வேகத்தின் அளவு, உயரம், தாக்குதல் கோணம் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டுள்ளன. அனைத்தும் திருப்திகரமாக இருந்ததாக தெரிவித்தார் அந்த அதிகாரி.
என்பி1 விமானமானது (பயிற்சி விமானம்) கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் முறையாக அது 2012ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி அது முதல முறையாக பறந்தது. 2014 டிசம்பர் 6ம் தேதி நிலவரப்படி இந்த விமானமானது 29 முறை பறந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது கோவாவில் முதல் முறையாக ஸ்கை ஜம்ப் செய்யவுள்ளது இந்த இலகு ரக போர் விமானம். ஐஎன்ஐஸ் ஹன்ஸா கடற்படைத் தளத்தில் இந்த சோதனை நடைபெறவுள்ளது. இதற்காக ஒரு நிபுணர் குழு ஏற்கனவே கோவா போய் விட்டது.
இதுகுறித்து ஒரு அதிகாரி கூறுகையில், ஸ்கை ஜம்ப்புக்குத் தேவையான மாற்றங்கள் ஏற்கனவே விமானத்தில் செய்யப்பட்டு விட்டது. தொழில்நுட்ப ரீதியாக ஸ்கை ஜம்ப் என்பது சற்று சவாலானது. அமெரிக்கா, உக்ரைன் போன்ற சில நாடுகள்தான் இதில் வெற்றிகரமாக திகழ்கின்றன. நமக்கு இது புதிதாகும் என்றார் அவர்.
கோவா ஐஎன்எஸ் ஹன்சா கடற்படைத் தளத்தில் கடந்த பிப்ரவரி மாதம்தான் எஸ்.பி.டி.எப் எனப்படும் கடலோர சோதனை மையம் அமைக்கப்பட்டது. இது ஆசியாவின் முதலாவது கடலோர கடற்படை சோதனை மையமாகும். இங்கு தற்போது மிக் 29க ரக விமானங்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. அவை ஸ்கை ஜம்ப் மற்றும் அர்ரெஸ்டர் ஹூக் லேன்டிங் ஆகிய சோதனைகளில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் தற்போது என்பி 1 விமானமானது ஸ்கை ஜம்ப்பில் மட்டும் ஈடுபடுத்தப்படவுள்ளது.
இந்த சோதனைக்காக என்பி 1 விமானத்தை பெங்களூரு எச்ஏஎல் விமான நிலையத்திலிருந்து கோவாவுக்கு பயணிக்கவுள்ளது. ஒரு மணி நேரத்தில் விமானம் கோவா வந்து சேரும்.
ஸ்கை ஜம்ப் சோதனையின்போது என்பி 1 விமானத்தை தேசிய விமான சோதனை மையத்தைச் சேர்ந்த கமாடர் டி.ஏ. மவ்லாங்கர் பைலட்டாக செயல்பட்டு செலுத்துவார்.
தற்போது இலகு ரக விமானங்களுக்கு தேஜாஸ் என்றுதான் பெயர் வைத்துள்ளனர். ஆனால் கடற்படை அதிகாரிகளுக்கு இந்தப் பெயரில் உடன்பாடு இல்லையாம். எனவே என்பி 1 விமானத்திற்கு கடற்படை புதிய பெயரை விரைவில் சூட்டும் என்று தெரிகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்தான் தேஜாஸ் என்ற பெயரைச் சூட்டியவர் என்பது நினைவிருக்கலாம். புதிய பெயர் சூட்டலுக்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்கும் திட்டத்தில் கடற்படையினர் உள்ளனர்.
கோவா சோதனை கடற்படைக்கு முக்கியமானதாகும். காரணம் என்பி1 விமானத்தில் மேலும் பல எதிர்கால சோதனைகளுக்கு இந்த ஸ்கை ஜம்ப் சோதனை அவசியமாதாகும். மேலும் 2வது என்பி 2 விமானமும் கூட தயாராகி வருகிறது. இது தாக்குதல் விமானமாகும் (fighter variant). இது எச்எஏல்லில் தயாரிப்பில் இருந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இது தனது முதல் பரிசோதனையை முடிக்கும் என்று தெரிகிறது.
இலகு ரக விமானத் திட்டமானது, இந்தியாவின் மிகப் பெரிய ஆய்வு மற்றும் வளர்ச்சித் திட்டமாகும். ஒவ்வொரு விமானமும் ரூ. 250 கோடி மதிப்பில் தயாராகிறது. அதேசமயம், ஒரு ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கு நாம் செலவிடுவது ரூ. 220 கோடியாகும். பிஎஸ்எல்விக்கு ரூ. 80 முதல் 100 கோடியாகிறது. அக்னி ஏவுகனை ஒன்றின் மதிப்பு ரூ. 50 கோடியாகும்.
பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், என்பி 1 விமானத்துடன் பிவி 6 பயிற்சி மற்றும் எல்எஸ்பி 7 விமானமும் சோதனை செய்து பார்க்கப்படும். மேலும், பிவி6 மற்றும் எல்எஸ்பி 7 ஆகியவை லே வரைக்கும் போகவுள்ளன.
மேலும், எச்ஜேடி 36 எனப்படும் இன்டர்மீடியேட் ஜெட் பயிற்சி விமானம் கடல் பயிற்சிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இதுவும் கோவாவில் நடைபெறும் என்றார்.
கடற்படையின் இலக ரக விமானங்களை கடற்படையில் சேர்க்கத் தகுதியானவை என்ற சான்றிதழ் பெற இந்த சோதனை அவசியமாகும்.
கோவாவில் அமைக்கப்பட்டுள்ள கடலோர சோதனை மையமானது, கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தின் பாணியில் கட்டப்பட்டதாகும். மேலும் இது முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட தளமும் ஆகும். இதில் 14 டெக் ஸ்கை ஜம்ப் டேக் ஆப் தளமும், ஒரு அரெஸ்டிங் கியரும் உள்ளன. மேலும் ஆப்டிகல் லேன்டிங் சிஸ்டம், டிவி லேன்டிங் கன்ட்ரோல் சிஸ்டம், லைட் சிக்னல்லிங் சிஸ்டம் மற்றும் பல்வேறு துணைப் பிரிவுகளும் இங்கு உள்ளன.
இந்திய விமானப்படைக்கான எல்சிஏ திட்டம் தாமதமானது போலவே, கடற்படையின் எல்சிஏ திட்டமும் கூட தாமதமாகத்தான் உள்ளது. பல்வேறு பிரச்சினைகளிலும் அது சுிக்கியது. கடந்த காலத்தில், ஏடிஏவில் உள்ள வடிவமைப்பாளர்கள் மற்றும் எச்ஏஎல்லில் உள்ள தயாரிப்பாளர்கள் பல சின்னச் சின்ன சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது. இதனால் தான் விமானத் தயாரிப்பு தாமதமானது.
சமீபத்தில் ஒன்இந்தியாவுக்குப் பேட்டி அளித்த கடற்படை தலைமைத் தளபதி சீப் அட்மிரல் ஆர்.கே.தோவன் கூறுகையில், எல்சிஏ திட்ட தாமதம் குறித்துக் கவலை தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், இது முக்கியமான திட்டம். கொச்சியில் ஐஏசி உள்ள நிலையில் கோவாவில் எஸ்பிடிஎப் தயாராகி வருகிறது. இந்த திட்டம் விரைவுபடுத்தப்படுவது நல்லது என்று கூறியிருந்தார்.
கோவா திட்டம் குறித்து இன்று கடற்படைத் தலைமைத் தளபதிக்கு அதிகாரிகள் விளக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.