சியாச்சின் பனிச் சிகரத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர்
பெங்களூரு: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் தயாரிப்பான இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர் சியாச்சின் பனிச் சிகரத்தில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. சியாச்சின் பனிச் சிகரத்தில் தரையிறங்கிய முதல் தாக்குதல் ஹெலிகாப்டர், இந்த எல்சிஎச்தான்.
இதன் மூலம் அதிக உயரத்தில் தரையிறங்கும் சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருப்பதாக எச்.ஏ.எல். அறிவித்துள்ளது.
இதுகுறித்து எச்.ஏ.எல். தலைவரும், நிர்வாக இயக்குநருமான டி. சுவர்ண ராஜு ஒன்இந்தியாவிடம் கூறுகையில், இந்த சோனைகள் ஆரம்ப கட்ட செயல்பாட்டு அனுமதிக்கு முந்தைய முக்கிய சோதனைகள் ஆகும். இவை வெற்றி பெற்றிருப்பது திருப்தி தருகிறது.
இந்த சோதனைகள் அனைத்தும் எதிர்பார்த்த முடிவுகளைக் கொடுத்துள்ளன. இது திருப்தி அளிக்கிறது. லேவில் நடந்த சோதனையானது, ஹெலிகாப்டரின் சிறப்பான செயல்பாட்டையும், குறைந்த வேகத்தில் ஹெலிகாப்டர் செயல்படும் விதத்தையும் சரியான முறையில் நிரூபித்துள்ளது. அதிக உயரத்தில் மோசமான வானிலையிலும் கூட ஹெலிகாப்டர் சிறப்பாக செயல்பட்டது.
சியாச்சினில் உள்ள இறங்கு தளத்தில் சரியான முறையில் இறங்கி, மேலெழும்பி இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர் சிறப்பாக செயல்பட்டது.
சியாச்சின் இறங்கு தளத்தில் தரையிறங்கிய முதல் தாக்குதல் ஹெலிகாப்டர் எல்.சி.எச்தான் என்பது மகிழ்ச்சி தருவதாகும் என்றார் அவர்.
லே பகுதியில் நடந்த சோதனையின்போது 3வது புரோட்டோடைப் எல்.சி.எச். பயன்படுத்தப்பட்டது. அப்போது அங்கு வெப்பநிலை 13 முதல் 17 டிகிரி சென்டிகிரேட் ஆக இருந்தது. இந்திய விமானப்படையின் பைலட்டுகள், ராணுவ அதிகாரிகள், செமிலாக் மற்றும் டிஜிஏக்யூஏ நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த சோதனையில் பங்கேற்றனர்.
எச்.ஏ.எல் அதிகாரிகள் மேலும் கூறுகையில் எப்போதுமே லே பகுதியில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் சவாலாகவே இருக்கும். அதேசமயம், ஆச்சரியங்களும் அடங்கியிருக்கும். லடாக் மற்றும் கிழக்கு காரகோரம் பகுதியில் சிந்து நதி மற்றும் அதன் கிளை நதிகளான நூபுரா மற்றும் ஷியோக் ஆகியவை உற்பத்தியாகின்றன.
மேலும் பெரிய பெரிய மலைச் சிகரங்களும் இங்கு உள்ளன. இங்குள்ள மலைச் சிகரங்கள் 25,000 அடி உயரம் வரை இருக்கும். இங்கு சாதாரண மலைச் சிகரமே 20,000 அடி வரை இருக்கும். மிகவும் அடர்த்தியான அதிக அளவிலான பனிச் சிகரங்களைக் கொண்ட சவாலான, அபாயகரமான பகுதி இதுவாகும். 3வது பனிப் பிரதேசம் என்று கூட இதை அழைக்கப்படுகிறது.
சியாச்சின்தான் இதில் உயரமான பனிச் சிகரமாகும். இங்கு கோடை காலத்தில், ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் வெப்ப நிலை 30 டிகிரி வரை அதிகரிக்கும் என்றனற்.