‛மம்தாவை நெருங்கும் பாஜக’.. மே.வங்கத்தில் பரிதாபத்தில் காங்கிரஸ்! இந்தியா டூடே சர்வே ரிசல்ட் இதுதான்
கொல்கத்தா: நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை வெல்லும் என இந்தியா டூடே சார்பில் ‛மூட் ஆப் தி நேஷன் 2024' சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் பரிதாப நிலைக்கு செல்லும் என கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தமட்டில் பாஜக தனித்து களம் காண்கிறது.

மாறாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் ‛இந்தியா' கூட்டணியில் இருக்கின்றன. இருப்பினும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து தான் போட்டியிட உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியாக போட்டியிடவில்லை என அந்த கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்களின் மனநிலை என்ன? என்பது பற்றி Mood Of the Nation 2024 என்ற பெயரில் இந்தியா டூடே சார்பில் நாடு முழுவதும் சர்வே மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 2024 ஜனவரி மாதம் 28 ம் தேதி வரை மொத்தம் 35,801 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த சர்வே முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வே முடிவின்படி மொத்தமுள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வென்ற நிலையில் இந்த முறையும் அதேபோன்று 22 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த கட்சிக்கு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட ஓட்டு சதவீதம் என்பது 4 சதவீதம் வரை குறையலாம் என கூறப்பட்டுள்ளது. கடந்த முறை 57 சதவீத ஓட்டுகளை அள்ளிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை 53 சதவீதம் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக பாஜக 19 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாக சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 18 தொகுதிகளை வென்ற பாஜக இந்த முறை கூடுதலாக ஒரு தொகுதியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த கட்சியின் ஓட்டு சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜகவுக்கு கடந்த தேர்தலைபோலவே 40 சதவீத ஓட்டுகள் கிடைக்கலாம் என சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சியை எடுத்து கொண்டால் கடந்த 2019 தேர்தலில் 2 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால் இந்த முறை அந்த கட்சிக்கு ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications