மோடியை எதிர்த்து காந்தி பேரன், சோனியாவை எதிர்த்து ஷாசியாவை நிறுத்த ஆம் ஆத்மி திட்டம்
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக மகாத்மா காந்தியின் பேரன் கோபால்கிருஷ்ண காந்தியை நிறுத்த ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக முன்னாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஷாசியா இல்மியை நிறுத்த ஆம் ஆத்மி கட்சி ஆலோசித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு எதிராக மகாத்மா காந்தியின் பேரனும், முன்னாள் ஆளுநருமான கோபால்கிருஷ்ண காந்தியை நிறுத்த கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.
காந்தி ஏன்?
கோபால்கிருஷ்ண காந்தி மகாத்மாவின் பேரன் மட்டும் அல்ல, இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலான ராஜகோபாலாச்சாரியின் பேரனும் ஆவார். இரண்டு பெரிய தலைவர்களின் பேரனை மோடிக்கு எதிராக நிறுத்துவது தான் சரி என்று நினைக்கிறது ஆம் ஆத்மி கட்சி.
அழைப்பு
ஆம் ஆத்மி கட்சி கோபால்கிருஷ்ண காந்தியை கடந்த 2 வாரங்களுக்கு முன்பே அணுகி நீங்கள் தான் மோடியை எதிர்த்து லோக்சபா தேர்தலில் நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு அவர் இன்னும் பதில் அளிக்கவில்லை.
போட்டி இல்லை
நான் ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகளை மதிக்கிறேன். அவர்கள் நம் அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் நான் ஆம் ஆத்மி கட்சியில் சேரவோ, தேர்தலில் போட்டியிடவோ போவதில்லை என்று கோபால்கிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி
கோபால்கிருஷ்ண காந்தியின் அண்ணனும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ராஜ்மோகன் காந்தி 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராஜீவ் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இல்மி
முன்னாள் பத்திரிக்கையாளரான இல்மி கடந்த டிசம்பர் மாதம் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டார். அவர் வெறும் 300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
முடிவு செய்யவில்லை
ரே பரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிடுவது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை என்று இல்மி தெரிவித்துள்ளார்.