15 வருடம் கழித்து ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானம்.. பரபரப்பாகும் பாரதம் + லோக்சபா!
டெல்லி: லோக்சபாவில் கடந்த 15 வருடங்களில் முதல் முறையாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படவுள்ளதால் நாடு முழுவதும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் பாஜக அரசு தோல்வி அடையும் வாய்ப்புகள் குறைவு என்றாலும் கூட ஒரு விதமான எதிர்பார்ப்பு கலந்த பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரை எடுத்த எடுப்பிலேயே அனலாக்கி விட்டது இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம்.
15 ஆண்டுகளில் முதல் முறை
கடந்த 15 ஆண்டுகளில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வருவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் பாஜக அரசுக்கு எதிரானது என்பது சுவாரஸ்யத்துக்குரியது.
வாஜ்பாய் vs சோனியா காந்தி
கடந்த 2003ம் ஆண்டு மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியில் இருந்தது. அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். அதில் வாஜ்பாய் அரசு தப்பியது. போதிய பலம் இல்லாததால் எதிர்க்கட்சிகள் அப்போது தோல்வி அடைந்தன.
இப்போதும் அதே நிலைதான்
இப்போதும் கூட கிட்டத்தட்ட அதே நிலைதான். கூட்டணிக் கட்சிகள் மற்றும் அதிமுகவின் லட்டு போன்ற 37 எம்.எல்.ஏக்கள் கையில் இருப்பதால் பாஜக படு தைரியமாக உள்ளது. இருப்பினும் தங்களது எதிர்ப்பைக் காட்ட, முடிந்தவரை முட்டி மோத எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.. மேலும் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் பாஜக மத்தியில் ஒரு பீதியைக் கிளப்பவும் இது கை கொடுக்கலாம்.
பட்ஜெட் கூட்டத் தொடர்
ஏற்கனவே பாஜகவுக்கு ஒரு கெட்ட பெயரை இந்த நாடாளுமன்றம் ஏற்படுத்திக்கொடுத்து விட்டது. கடந்த 18 ஆண்டுகளில் நடந்த மோசமான பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த ஆண்டு நடந்த தொடர்தான். எந்தப் பணியும் நடக்கவில்லை. ஒதுக்கப்பட்ட நேரத்தில் 21 சதவீத அளவுக்குத்தான் லோக்சபாகூட்டம் நடந்தது. அதேபோல ராஜ்யசபா 27 சதவீத நேரத்தை பயன்படுத்திக் கொண்டது.