மத்தியபிரதேசத்தில் மாஸ்க் அணியாத இளைஞர் மீது மிருகத்தனமாக தாக்குதல் - ராகுல்காந்தி கண்டனம்
கொரோனா விதிகளை அமல்படுத்தும் போர்வையில் இத்தகைய வெட்கக்கேடான மனிதாபிமானமற்ற தன்மையை நாடு ஏற்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்
போபால்: மத்தியப்பிரதேசத்தில் முகக்கவசம் சரியாக அணியவில்லை என கூறி இளைஞர் ஒருவரை பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் போலீசார் கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த கிருஷ்ணா கேயர் என்ற இளைஞர் மருத்துவமனையில் உள்ள தனது தந்தைக்கு உணவை எடுத்துச் சென்ற போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி முகக்கவசம் சரியாக அணியவில்லை என கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். தொடர்ந்து, அவர் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த போலீசார் அந்த நபரை சாலையிலேயே கடுமையாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபற்றி கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட நபர், முகக்கவசம் சரியாக அணியவில்லை என கூறி காவல் நிலையத்திற்கு வரும்படி தன்னிடம் கூறிய போலீசார், திடீரென அடித்து உதைத்ததாக குறிப்பிட்டார்.
கொரோனா விதிகளை அமல்படுத்தும் போர்வையில் இத்தகைய வெட்கக்கேடான மனிதாபிமானமற்ற தன்மையை நாடு ஏற்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
कोरोना नियमों को लागू करने की आड़ में इस तरह की शर्मनाक अमानवीयता देश को स्वीकार नहीं!
— Rahul Gandhi (@RahulGandhi) April 7, 2021
सुरक्षा करने वाले पुलिसकर्मी ही अत्याचार करें तो जनता कहाँ जाये?#Indore pic.twitter.com/t3Ifv0ajJ0
ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா விதிகளை அமல்படுத்தும் போர்வையில் இத்தகைய வெட்கக்கேடான மனிதாபிமானமற்ற தன்மையை நாடு ஏற்கவில்லை! என்று குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, பாதுகாப்பு போலீசார் சித்திரவதை செய்தால், பொதுமக்கள் எங்கு செல்வார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே போலீசாருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் இந்த வீடியோ வெளியாகி உள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதுபற்றிய விசாரணையும் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications