ம.பி. 6 அமைச்சர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு கமல்நாத் பரிந்துரை
போபால்: மத்திய பிரதேசத்தின் 6 அமைச்சர்களை உடனே டிஸ்மிஸ் செய்ய ஆளுநர் லால்ஜி தாண்டனுக்கு முதல்வர் கமல்நாத் பரிந்துரைத்துள்ளார்.
முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, காங்கிரஸ் கட்சியில் இருந்தே ஜோதிராதித்யா சிந்தியா வெளியேறிவிட்டார். தற்போது கமல்நாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் 6 பேரை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஆளுநர் லால்ஜி தாண்டனுக்கு முதல்வர் கமல்நாத் கடிதம் அனுப்பியுள்ளார்.
Chief Minister Kamal Nath writes to Madhya Pradesh Governor, recommends the immediate removal of six ministers. pic.twitter.com/wcUxg6LKLt
— ANI (@ANI) March 10, 2020
இதனிடையே முதல்வர் கமல்நாத் வீட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கந்திலால் புரியா, கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் அரசு நிலையாக இருக்கிறது.
எங்களால் ஆட்சியை தொடர்ந்து நடத்தவும் முடியும். கமல்நாத் தலைமையிலான அரசு ஒருபோதும் கவிழாது. பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது என திட்டவட்டமாக கூறினார். அதேநேரத்தில் மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான லஷ்மண் சிங் கூறுகையில், நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரவும் கூட தயாராக உள்ளோம்.
ஆனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சியை மீண்டும் அமைக்கும். கமல்நாத் ஆலோசனைப்படி செயல்படுவோம் என கூறியுள்ளார். முன்னதாக சிவ்ராஜ்சிங் சவுகானை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. பிஷாகு லால் ஷாகு, நான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். தற்போது பாஜகவில் இணைந்து இருக்கிறேன் என்றார்.