மேகி நூடுல்ஸை பவுடராக்கி எரிபொருளாக பயன்படுத்தும் ஏசிசி சிமெண்ட்ஸ்
பெங்களூர்: சந்தையில் இருந்து வாபஸ் பெறப்பட்டுள்ள மேகி நூடுல்ஸ் பொடியாக்கப்பட்டு சிமெண்ட் ஆலையில் உள்ள பாய்லர்களுக்கான மாற்று எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் மற்றும் மோனோசோடியம் க்ளூட்டமேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அதற்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்தது. இதையடுத்து மேகி நூடுல்ஸை நெஸ்லே நிறுவனம் சந்தையில் இருந்து வாபஸ் பெற்றது.
வாபஸ் பெறப்பட்டுள்ள நூடுல்ஸை பல்வேறு சிமெண்ட் ஆலைகளில் வைத்து பொடியாக்கி எரித்து வருகிறது நெஸ்லே. இந்நிலையில் கர்நாடக மாநிலம் காலபர்கி மாவட்டத்தில் உள்ள வாதியில் இருக்கும் ஏசிசி சிமெண்ட் ஆலையில் உள்ள பாய்லர்களுக்கான மாற்று எரிபொருளாக மேகி நூடுல்ஸை பயன்படுத்துகிறார்கள்.
நூடுல்ஸ்
முதலில் டப்பா, டப்பாவாக உள்ள மேகி நூடுல்ஸை ஒரு எந்திரத்தில் போட்டு பெடியாக்குகிறார்கள். பொடியாக்கப்பட்ட நூடுல்ஸை பாய்லர்களுக்கான மாற்று எரிபொருளாக பயன்படுத்துகிறார்கள்.
எரிபொருள்
இது குறித்து காலபர்கி உணவு பாதுகாப்பு அதிகாரி ஆர்.எஸ். பிராதார் கூறுகையில், மேகியை 40 மிமீட்டர் அளவுக்கு பொடியாக்கி அதை உமியுடன் சேர்த்து பாய்லர் எரிபொருளாக பயன்படுத்துகிறார்கள். கடந்த 9ம் தேதி முதல் 13 மாநிலங்களில் இருந்து சுமார் 1110 டன் மேகி நூடுல்ஸ் ஏசிசி ஆலைக்கு வந்துள்ளது.
மேகி
ஆலைக்கு வந்த நூடுல்ஸுகள் கடந்த 13ம் தேதி முதல் பொடியாக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை வரை 780 டன் நூடுல்ஸ் பொடியாக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நூடுல்ஸும் விரைவில் பொடியாக்கப்படும் என்றார் பிராதார்.
ஒப்பந்தம்
மேகி நூடுல்ஸை அழிப்பது தொடர்பாக ஏசிசி சிமெண்ட் நிறுவனம் மற்றும் நெஸ்லே இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது போன்று நாட்டின் பல்வேறு சிமெண்ட் ஆலைகளில் மேகி நூடுல்ஸை அழிக்கும் பணி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.