பூதாகரமாகும் மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு
லக்னோ: மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளூட்டமேட்டை சேர்த்த நெஸ்ட்லே நிறுவனம் உள்பட 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நெஸ்ட்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ரசாயன உப்பான மோனோசோடியம் க்ளூட்டமேட் உள்ளதை உத்தர பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து மேகி நூடுல்ஸுக்கு தடை விதிப்பது குறித்து உத்தர பிரதேச மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கு
உத்தர பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு மேகி நூடுல்ஸை தயாரிக்கும் நெஸ்ட்லே நிறுவனம் மீது பாரபங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக நெஸ்ட்லேவின் நாகல் கலான் இன்டஸ்ரியல் ஏரியா யூனிட், டெல்லியைச் சேர்ந்த நெஸ்ட்லே இந்தியா லிமிடெட், பாரபங்கியில் உள்ள ஈஸி டே கடை, டெல்லியில் உள்ள ஈஸி டே நிறுவனம் மற்றும் அதன் எப்.எம்.சி.ஜி. மேனேஜர்கள் மோகன் குப்தா, ஷபாப் ஆலம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன்
மேகி நூடுல்ஸ் சத்தானது என்று விளம்பரம் செய்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீக்சித் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது உத்தர பிரதேச மாநில வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஈயம்
மேகி நூடுல்ஸில் மோனோசோடியம் க்ளூட்டமேட் மட்டும் அல்லாது ஈயமும் அனுமதிக்கப்பட்டதை விட 17 முறை அதிகம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கியில் உள்ள ஈஸி டே கடையில் இருந்த மேகி நூடுல்ஸை ஆய்வு செய்ததில் தான் இது தெரிய வந்தது.

மத்திய அரசு
மேகி விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாயத்தில் மேகி விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications