ஜெயலலிதா அப்பீல் மனு தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா அன்பழகன் தரப்பு வாதம்?
பெங்களூரு: ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணையியில் அன்பழகன் தரப்பு தனது வாதத்தை சமர்ப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததும், அதுகுறித்து அடுத்த சில நிமிடங்களிலேயே, உயர்நீதிமன்றத்தில் அன்பழகன் தரப்பு தங்கள் வாதங்களை தாக்கல் செய்தது.
இதைத் தொடர்ந்து, கர்நாடக அரசு தனது தரப்பு வாதத்தை மறுநாள் தாக்கல் செய்துள்ளது. மேல்முறையீட்டு வழக்கு நடைமுறையே தவறு என்று கர்நாடக தரப்பில் ஆச்சாரியா வாதத்தில் கூறிய நிலையில், அன்பழகன் தரப்போ, கூட்டு சதி என்ற அம்சத்தில்தான் உறுதியாக இருந்தது.
அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த 81 பக்க வாதத்தின் முக்கிய சாராம்சமே, கூட்டுசதி நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதுதான்.
கூட்டு சதி
அன்பழகன் மனுவின் முக்கிய அம்சங்கள்: குற்றவாளிகளான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி நான்கு பேரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டு பல அசையும், அசையாச் சொத்துகள் வாங்கி இருக்கிறார்கள். இவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் ஆதாரத்தோடு நிரூபித்து இருக்கிறோம். அதை கீழ் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
வாக்குமூலங்கள்
ஜெயலலிதாவிடமிருந்து மற்றவர்களுக்கு எந்த ஒரு பணப் பரிமாற்றமும் நடைபெறவில்லை என்கிறார்கள். ஆனால் ஜெயலலிதாவும் சசிகலாவும் பார்ட்னராக இருந்து ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனங்களைத் தொடங்கி நடத்தினார்கள். அப்போது ஜெயலலிதா, பவர் ஆஃப் அட்டர்னி-யை சசிகலாவுக்குக் கொடுத்தார். சசிகலாவிடம் இருந்து சுதாகரன், இளவரசி மற்றும் கம்பெனிகளுக்கு பல கோடி பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதற்குச் சாட்சியாக ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த ஓய்வுபெற்ற தமிழக தலைமைச் செயலக ஊழியர் ஜெயராமன், ராமவிஜயன் அளித்துள்ள வாக்குமூலம் உறுதி செய்துள்ளது.
27 ரூபாய் சம்பளம்
ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை 5 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்தபோது வெறும் 27 ரூபாய்தான் சம்பளம் வாங்கி இருக்கிறார். அப்படியிருக்கும்போது, எப்படி இவ்வளவு சொத்துக்களை குவித்திருக்க முடியும்.
இவர்கள் எந்தெந்த வகையில் பணம் சம்பாதித்தார்கள்? அதை எப்படியெல்லாம் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை உரிய ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
மார்பிள்கள்
மார்பிள்கள், கிரானைட் அதிகப்படுத்தி காட்டப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதை அவர்கள் நிரூபிக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் மார்பிள்ஸ், கிரானைட் விலைகளை முறைப்படி மும்பைக்கே சென்று மதீப்பீடு செய்திருக்கிறார்கள்.
வங்கி பரிவர்த்தனைகள்
இவர்களுக்காக வாகனங்கள் வாங்கியதை பதிவுசெய்த ராஜேந்திரனும், நிலங்கள் வாங்கியது தொடர்பாக பதிவுசெய்த ராதாகிருஷ்ணன், முருகேஷன், சிவா, ஜானகி, தேவராஜன் ஆகியோரும், கம்பெனிகள் தொடங்கியது தொடர்பாக லட்சுமி நாராயணன், பாலு, ரகுராமன் ஆகியோரும், நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் முதலீடு செய்தது தொடர்பாக மாரியப்பனும், தங்க, வைர, வெள்ளி ஆபரணங்கள் மதிப்பீடு தொடர்பாக வாசுதேவனும், வங்கிக் கணக்குகளில் பணப் பரிமாற்றம் செய்தது தொடர்பாக இந்தியன் வங்கி மேலாளர் அருணாச்சலம், கனரா வங்கி மேலாளர் வித்யாசாகர் ஆகியோரும் அளித்துள்ள சாட்சியங்களால் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
வருமான வரித்துறையை வைத்து தப்ப முடியாது
வருமானவரித் துறை, ஒருவரின் சொத்துகளுக்கு மட்டுமே வரியை விதிக்கும். குற்றவியல் நீதிமன்றம், அவருக்கு அந்த சொத்துகள் எப்படி வந்தன என்பதை ஆய்வு செய்யும் என்று உச்ச நீதிமன்றம் சுரேஷ்ராஜன் வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. அதனால் இந்த வழக்கில் குற்றவாளிகள் வருமானவரித் துறை தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
இவ்வாறு அன்பழகன் தரப்பு தன்னுடைய மனுவில் குறிப்பிட்டு உள்ளது.
கடைசி நேர களேபர வாதம்
ஒருவேளை, அன்பழகன் தரப்பு வாதத்தை தாக்கல் செய்ய சுப்ரீம்கோர்ட் கடைசி நேரத்தில் அனுமதித்திருக்காவிட்டால், இந்த வாதங்கள் விடுபட்டுபோயிருக்கும். எனவே, இப்போது இவ்வாதங்களை ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி பரிசீலிக்க வேண்டிய நிலையில் உள்ளார். இது ஜெயலலிதா அப்பீல் வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை தீர்ப்பு வெளியாகும்போது தெரிந்துகொள்ளலாம்.