“மேக் இன் இந்தியா” சட்டைப் பொத்தான்கள், கீ செயின்கள் மூலம் பிரசாரம் செய்ய அரசு முடிவு
டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தைப் பிரலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு குதிக்கிறது. இதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் லோகோ பொறித்த சட்டைப் பொத்தான்கள், கீ செயின்கள் ஆகியவற்றை ஆயிரக்கணக்கில் தயாரித்து விநியோகிக்க மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளதாம்.
இதற்காக 5000 மேக் இன் இந்தியா சட்டைப் பொத்தான்கள் தயாரிக்கப்படவுள்ளதாம். அதேபோல 2500 கீசெயின்கள் தயாரிக்கப்படுமாம். இவற்றை விநியோகித்து பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இதில் சட்டைப் பொத்தான்களை வெண்கலம் மற்றும் தங்க இழையுடன் கூடியதாக தயாரிக்கவுள்ளனராம். அதேபோல கீ செயின்களை அக்ரிலிக்கி்ல் தயாரிக்கவுள்ளனராம்.
இந்தப் பொருட்களைத் தயாரித்துத் தர டெண்டரும் விடப்படவுள்ளது. இந்தப் பொருட்கள் தரமாக தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வைடன் பிளஸ் கென்னடி இந்தியா என்ற கிரியேட்டிவ் ஏஜென்சியை மத்திய அரசு பணியில் அமர்த்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் மேக் இன் இந்தியா பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார். உலகளாவிய வர்த்தக மையமாக இந்தியாவை மாற்றும் நோக்கில் இந்த திட்டத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.
இதுதொடர்பான பிரசாரம் கடந்த ஜனவரி மாதம் டாவோஸில் நடந்த உலக பொருளாதார சங்கமக் கூட்டத்தின்போது முன்னெடுக்கப்பட்டது. அடுத்து ஜெர்மனியில் நடைபெறவுள்ள ஹானோவோஸ் மெஸ் கூட்டத்திலும் இந்தப் பிரசாரம் நடைபெறவுள்ளது.