மதிய உணவு திட்டத்தில் சிக்கன், பழங்கள்.. மம்தா பானர்ஜி சூப்பர் பிளான்..ஆனாலும் ஒரே ஒரு சிக்கல்
கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுடன் வாரத்திற்கு ஒருநாள் கோழிக்கறி மற்றும் பழங்கள் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 16 வாரங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் இந்த திட்டம் பெரும் நிதி முறைகேடு கொண்டது என பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு தற்போது மதிய உணவு திட்டத்தில் அரிசி சாதம், பருப்புகள், காய்கறிகள், சோயாபீன் மற்றும் முட்டைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் மூலம் மொத்தம் 1.16 கோடி மாணவர்கள் பயன்பெறுகின்றனர். 60 : 40 என்ற விகிதத்தில் மாநில மற்றும் மத்திய அரசின் நிதி திட்டத்தின் கீழ் மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாரம் ஒருமுறை சிக்கன்
இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் சிக்கன், பழங்களையும் வழங்க மேற்கு வங்காளத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை செயல்படுத்தப்படும் என்று மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. இதற்காக ரூ. 317 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவுடன் வாரம் ஒருமுறை சிக்கன் மற்றும் பழங்கள் வழங்கப்பட உள்ளது.
கூடுதல் ஊட்டச்சத்து வழங்கும் நோக்கத்தில்
நான்கு மாதங்களுக்கு மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. அதன்பின் தொடருமா? என்பது பற்றி எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. மாணவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வழங்கும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் இதற்காக ஒரு மாணவருக்கு கூடுதலாக ரூ.20 செலவு செய்யப்படும் என்றும் 16 வாரங்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் மேற்கு வங்க மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் விமர்சனங்கள்
மேற்கு வங்காள அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் வகையில் இருந்தாலும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது. மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என ஒரு பக்கம் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
சொந்த நலனுக்காக இந்த முடிவு
மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும் பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி இந்த திட்டம் மிகப்பெரும் நிதி முறைகேடு கொண்டது என கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு சுவேந்து அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "மாநில அரசு தனது சொந்த நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளது. மதிய உணவு திட்ட நிதியை சொந்த நலனுக்காக மாநில அரசு முறையற்ற வகையிலும் தெளிவான திட்டத்துடன் திருப்பி விடுகிறது" என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.